விளையாட்டு

மாறியது ஐசிசி ரூல்: மெதுவாக பந்துவீசினால் கேப்டன்களுக்கு தடையில்லை!

webteam

மெதுவாக பந்துவீசினால், சில போட்டிகளில் விளையாட கேப்டன்களுக்கு தடைவிதிக்கும் விதியை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நீக்கியுள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டில் குறிப்பிட்ட நேரத்துக்குள் பந்து வீசி முடிக்காமல் இருந்தால் கேப்டன்களுக்கு ஓரிரு போட்டிகளில் தடை விதிக்கும் முறை இதுவரை இருந்து வந்தது. அதாவது மெதுவாக பந்துவீசிய பிரச்னையில் சிக்கினால் கேப்டனுக்கு அபராதம் மட்டுமின்றி, தகுதி இழப்பு புள்ளியும் விதிக்கப்படும். ஒரு வருடத்துக்குள் இரண்டு முறை இந்தப் பிரச்னையில் சிக்கினால், தகுதி இழப்பு புள்ளியின் எண்ணிக்கை உயரும். அதனடிப்படையில் கேப்டனுக்கு தடை விதிக்கப்படும். இப்போது இந்த தடையை ஐ.சி.சி. நீக்கியுள்ளது. இனி மெதுவாக பந்து வீசினால் மொத்த வீரர்களுக்கும் அபராதம் மட்டும் விதிக்கப்படும் என்று ஐசிசி அறிவித்துள்ளது. 

அதோடு, பந்து தலையில் பட்டு வீரர்கள் காயமடைந்தால், அவருக்குப் பதிலாக மாற்று வீரரை களமிறக்கும் திட்டத்தை ஐசிசி அங்கீகரித்துள்ளது. அந்த வீரர் பேட்டிங் மட்டுமின்றி பந்தும் வீசலாம். 

வரும் 1 ஆம் தேதி தொடங்கும், இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகளுக்கு  இடையிலான ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டியிலிருந்து இந்த விதிமுறை நடைமுறைக்கு வருகிறது.