விளையாட்டு

"ஒரு புகைப்படத்தில் மூன்று ஜாம்பவான்கள்" - அசத்தலான புகைப்படத்தை வெளியிட்ட ஐசிசி

jagadeesh

தோனி, சச்சின், டிராவிட் இருக்கும் புகைப்படத்தைப் பழைய நினைவுகள் எனக் குறிப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் ஐசிசி வெளியிட்டுள்ளது.

இந்தப் படம் 2007ம் ஆண்டு, மூன்று டெஸ்ட் போட்டிகளுக்காகவும் மற்றும் ஏழு ஒருநாள் போட்டிகளுக்காகவும் இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட பயிற்சியின்போது எடுக்கப்பட்டது என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். இதனைப் பார்த்து மகிழ்ச்சியான ரசிகர்கள் ட்விட்டரில் "அது ஒரு கனாக் காலம்" என்றும் "மூன்று ஜாம்பவான்கள் ஒரே புகைப்படத்தில்" என்றும் கொண்டாடித் தீர்த்து வருகின்றனர்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் ஐபிஎல் உள்ளிட்ட போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஜூலை மாத இந்தியா - இலங்கை இடையே நடைபெறவிருந்த கிரிக்கெட் தொடரும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு என்பதால் கிரிக்கெட் வீரர்கள் பலரும் 50 நாட்களுக்கும் மேலாக வீட்டிலேயே முடங்கியுள்ளனர். ஊரடங்கு படிப்படியாகத் தளர்த்தப்படும் சூழல் இருப்பதால் கிரிக்கெட் வீரர்களுக்குப் பயிற்சி முகாமை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

இது குறித்து அண்மையில் பேட்டியளித்த பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் "கிரிக்கெட் வீரர்களுக்குப் பயிற்சி தொடங்கப்பட்டாலும் விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்ட வீரர்கள் சிலரால் நேரடியாகப் பயிற்சிக்கு வர முடியாத சூழ்நிலை ஏற்படும். ஏனென்றால் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மும்பையில் இருக்கின்றனர். ஆனால் நாங்கள் தொடர்ந்து ஆன்லைன் மூலமா வீரர்களிடையே தொடர்பிலிருந்து கொண்டு இருக்கிறோம்" என்றார்.