விளையாட்டு

இங்கிலாந்தில் மிரட்டுவார் ’சைனாமேன்’ குல்தீப்: சச்சின் நம்பிக்கை!

webteam

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ’சைனாமேன்’ குல்தீப் யாதவ் மிரட்டுவார் என்று சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது விராத் கோலி தலைமையிலான இந்திய அணி. டி20 தொடரை கைப்பற்றிய இந்திய அணி, ஒரு நாள் போட்டி தொடரை இங்கிலாந்திடம் இழந்தது. இந்நிலையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் பங்கேற்கிறது. முதல் போட்டி ஆகஸ்ட் 1 ஆம் தேதி தொடங்குகிறது. இதில் வெற்றி பெற இரு அணி வீரர்களும் கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் இந்தப் போட்டி பற்றி சச்சின் டெண்டுல்கர் அளித்த பேட்டி ஒன்றில், ‘ஒரு நாள் கிரிக்கெட்டில் குல்தீப் யாதவின் சுழற்பந்து வீச்சை இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜோ ரூட் சிறப்பாக எதிர்கொண்டார். அவரை போல மற்ற வீரர்கள், குல்தீப் சுழலை சமாளிப்பார்கள் என்று நினைக்கவில்லை.  அங்குள்ள சீதோஷ்ண நிலையில் வெயிலால் பிட்ச் காயும் போது, குல்தீப் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். ஒரு நாள் போட்டியில் இருந்தது போல ஆடுகளம் இருந்தால் இந்தியா வெற்றி பெற அதிக வாய்ப்பு இருக்கிறது. ஆடுகளம் புற்களோடு இருந்தால் இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர்கள் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள்.  

இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார், காயம் காரணமாக அணியில் இடம்பெறாதது பின்னடைவுதான். அவர் பந்தை நன்றாக ஸ்விங் செய்வார். அவர் இருந்தால் இந்தியாவுக்கு பெரிய பலமாக இருந்திருக்கும். 2014- ஆண்டு நடந்த தொடரில் அவர் பேட்ஸ்மேனாகவும் சிறப்பாகச் செயல்பட்டார். அவர் இல்லை என்றாலும் நமது மற்ற பந்துவீச்சாளர்கள் (இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், முகமது ஷமி, ஷர்துல் தாகூர்) சிறப்பாக செயல்படுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது’ என்றார்.