விளையாட்டு

விரைவில் ஓய்வு பெறுகிறேன்: மலிங்கா விரக்தி

webteam

‘சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இனி விளையாடுவேன் என்று நினைக்கவில்லை. அதனால் விரைவில் ஓய்வை அறிவிக்க இருக்கிறேன்’ என்று லசித் மலிங்கா கூறினார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா. சமீபகாலமாக அவரது ஆட்டத்திறன் கேள்விக் குறியாகியுள்ளது. இதனால் இலங்கை அணியில் இருந்து ஓரங்கட்டுப் பட்டு வருகிறார். இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடிய அவரை, இந்த வருடம் யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை. இப்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு வழிகாட்டியாக நியமிக்கப்பட்டிருக்கிறார். இதனால் விரக்தி அடைந்துள்ள அவர், விரைவில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறபோவதாகத் தெரிவித்துள்ளார். 

அவர் கூறும்போது, ‘சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இனியும் விளையாடுவேன் என்று நினைக்கவில்லை. மனரீதியாகவும் கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றுவிட்டேன். விரைவில் எனது ஓய்வு முடிவை அறிவிக்க இருக்கிறேன். எனது ஐபிஎல் ஆட்டமும் முடிந்துவிட்டது. மும்பை இந்தியன்ஸ் அணியில் எனக்கு புதிய அத்தியாயம் தொடங்க இருக்கிறது. அந்த அணியுடன் 10 வருடங்கள் இனிமையான அனுபவங்கள் இருக்கிறது.

எனக்கு 34 வயதாகிறது. என் இளமை இனி திரும்பப் போவதில்லை. அதனால் அடுத்தக் கட்டம் நோக்கி நகர இதுதான் சரியான நேரம். இலங்கைக்குச் சென்றதும் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாட போகிறேன். என் உடல் நிலை எப்படி ஒத்துழைக்கிறது என்பதை பார்த்துவிட்டு இலங்கை கிரிக்கெட் வாரியத்துடன் பேச இருக்கிறேன்’ என்றார்.