விளையாட்டு

டி20 உலகக் கோப்பை: இந்திய அணிக்கு துணைக் கேப்டனாகும் சீனியர் வீரர்? - பிசிசிஐ திட்டம்

சங்கீதா

டி20 உலகக் கோப்பை இந்திய அணியின் துணைக் கேப்டனாக மூத்த வீரரான ஹர்த்திக் பாண்ட்யாவை நியமிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன்களான தோனி மற்றும் விராட் கோலி தலைமையில் நடைபெற்ற சர்வதேசப் போட்டிகளில் ஆல் ரவுண்டராக ஆதிக்கம் செலுத்தி வந்த ஹர்திக் பாண்ட்யா, பின்னர் காயம் காரணமாக இந்திய அணியில் தனது இடத்தை இழந்து தவித்து வந்தார். பேட்டிங்கில் மட்டுமே கவனம் செலுத்தியதால், சில போட்டிகளில் ஹர்திக் பாண்ட்யா பிசிசிஐ ஆல் தவிர்க்கப்பட்டார்.

எனினும் அறுவை சிகிச்சை முடிந்து, 5 மாத தீவிர தொடர் பயிற்சியால் தனது முழு உடல் தகுதியை எட்டிய ஹர்திக் பாண்ட்யா, 15-வது சீசன் ஐபிஎல் தொடரில் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் மட்டுமில்லாது அறிமுக அணியான குஜராத் அணியின் கேப்டனாகவும் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வென்று கொடுத்து அனைவரின் பாராட்டுக்களையும், கவனத்தையும் ஈர்த்தார்.

இதனைத்தொடர்ந்து இந்திய அணியில் மீண்டும் விளையாட ஆரம்பித்த ஹர்திக் பாண்ட்யா, கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் கேப்டனாகவும் செயல்பட்டு, தொடரை கைப்பற்றி தனது திறமையை மீண்டும் நிரூபித்தார். இந்நிலையில், டி20 உலகக் கோப்பை இந்திய அணியின் துணைக் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச டி20 உலகக் கோப்பை போட்டி வருகிற அக்டோபர் 16-ம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது.

போட்டி ஆரம்பிக்க இன்னும் 2 மாதங்களே உள்ளநிலையில், இந்திய அணியின் துணைக் கேப்டனான கே.எல்.ராகுல் காயம் மற்றும் உடற்தகுதியால் அவதிப்பட்டு வருவதால் அவருக்கு உலகக் கோப்பை டி20 அணியில் இடம் கிடைப்பது கேள்விக்குறியாக உள்ளது. எனவே தற்போது கிரிக்கெட் தொடர்களில் தனது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஹர்த்திக் பாண்ட்யாவிற்கு, துணைக் கேப்டன் பதவி வழங்க பிசிசிஐ திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னாள் வீரர்கள் பலரின் ஆதரவும் ஹர்திக் பாண்ட்யாவிற்கு உள்ளதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.