விளையாட்டு

கிரிக்கெட் வீரர் மீது பாலியல் புகார்: சஸ்பெண்ட் பின்னணியில் ஷாக்!

webteam

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து இலங்கை வீரர் குணதிலகா சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு பாலியல் புகார் காரணம் எனத் தெரிய வந்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலகா. இவர் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடக்கும் டெஸ்ட் போட்டியில் நேற்று விளையாடி வந்தார். இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் வாரியம், ’தொடர்ந்து ஒழுங்கீனமாக நடந்து கொள்வதால், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து குணதிலகா சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்’ என்று அறிவித்தது. அதோடு அவரது ஆண்டு வருமானத்தில் 20 சதவிகித்தை அபராதமாக செலுத்த வேண்டும் என்று கூறியது. இது பரபரப்பை ஏற்படுத்தியது.

இலங்கை மண்ணில் இந்தியா, பங்களாதேஷ் அணிகள் பங்கேற்ற நிடாஹஸ் கோப்பைக்கான முத்தரப்பு டி20 தொடர் நடந்தது. இதில் பங்களா தேஷ்- இலங்கை அணிகள் மோதிய போட்டியின் போது வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது குணதிலகா, தமிம் இக்பாலிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்டாராம். இதே போல இந்திய அணி, கடந்த வருடம் இலங்கை சென்று விளையாடியது. அப்போதும் ஒழுங்கீனமாக நடந்து கொண்டாராம். இதனால் 6 ஒரு நாள் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டது. 

இந்நிலையில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இருந்தாலும் என்ன மாதிரியான ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டார் என்பது பற்றி இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவிக்கவில்லை.

சமீபத்தில், வெஸ்ட் இண்டீஸ் தொடரின் போது நைட் கிளப் சென்றுவிட்டு அணியுடன் தாமதாக இணைந்த ஜெஃப்ரி வாண்டர்சே என்ற இலங் கை சுழற்பந்துவீச்சாளருக்கு ஒரு வருடம் தடை விதிக்கப்பட்டது. இப்போது குணதிலகாவுக்கும் தடை விதிக்கப்பட்டிருப்பதால் இலங்கை வீரர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பாலியல் புகார் காரணமாகவே அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. 

குணதிலகாவின் நண்பர் ஒருவர் லண்டனில் இருக்கிறார். இங்கிலாந்தின் கென்சிங்டன் மற்றும் செல்ஷியா கிளப்பில் கிரிக்கெட் ஆடி வருகிறார். தொடக்க ஆட்டக்காரரான இவர், தனது தந்தையைப் பார்க்க சமீபத்தில் இலங்கை வந்தார். அப்போது இலங்கைக்குச் சுற்றுலா வந்த நார்வே நாட் டைச் சேர்ந்த இரண்டு பெண்களை இலங்கை கிரிக்கெட் வீரர் குணதிலகாவின் ஓட்டல் அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தாராம். வீரர்கள் தங்கும் அறைக்கு மற்றவர்களை அழைத்து வரக்கூடாது என்பது விதி. 

இது தொடர்பாக அந்தப் பெண்கள் கொடுத்த புகாரை அடுத்து குணதிலகாவின் நண்பர் கைது செய்யப்பட்டார். ஆனால் குணதிலகா கைது செய்யப்படவில்லை.  போலீசார், ’விசாரணையில் குணதிலகாவுக்கும் பாலியல் சம்பவத்துக்கும் தொடர்பில்லை என்பது தெரியவந்தது. அதனால் அவரிடம் மேலும் விசாரணை நடத்தவில்லை’ என்று தெரிவித்துள்ளனர்.