விளையாட்டு

"தோனிக்கு பாரத ரத்னா கொடுங்கள்"- காங்கிரஸ் எம்எல்ஏ கோரிக்கை !

jagadeesh

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் என்று போபால் தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ பி.சி.சர்மா கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுப்பெறுவதாக சனிக்கிழமை அறிவித்தார். இதனையடுத்து அவருக்கு சமூக வலைத்தளம் மூலமாக வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்து வருகிறது. விளையாட்டு வீரர்கள், அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் தோனிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மத்தியப் பிரதேசம் மாநிலம் போபால் மாநகரின் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் பி.சி.சர்மா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் "மகேந்திர சிங் தோனி, இந்த நாட்டின் விலை மதிப்பு இல்லாத பொக்கிஷம். அவர் இந்தியாவின் வெற்றியை அனைத்து நாடுகளிலும் நிலை நாட்டியிருக்கிறார். அவருக்கு உயரிய விருதான பாரத ரத்னா வழங்கி கெளரவிக்க வேண்டும்" என்றார்.

மேலும் "இந்திய கிரிக்கெட்டின் பெயரை உச்சத்துக்கு கொண்டு சென்ற அவருக்கு நாட்டின் உயரிய விருது வழங்குவதில் தவறில்லை" என தெரிவித்துள்ளார் பி.சி.சர்மா.