விளையாட்டு

ஆஷஸ் டெஸ்ட் முதல் நாள் போட்டி: 147 ரன்களில் சுருண்டது இங்கிலாந்து

நிவேதா ஜெகராஜா

புகழ்பெற்ற ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இந்தாண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.இத்தொடரின் முதல் போட்டி பிரிஸ்பேனில் இன்று தொடங்கியுள்ளது. 

டிசம்பர் 8 முதல் 12 வரை திட்டமிடப்படப்பட்டுள்ள இந்த டெஸ்ட் தொடரில், இன்றைய ஆட்டத்தில்  டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்திருந்தது. அதன்படி பேட்டிங்கில் இறங்கிய, இங்கிலாந்து அணி 147 ரன்களில் 10 விக்கெட்டுகள் இழந்து சுருண்டுள்ளது. ஆஸ்திரேலியா அணி சார்பில் அதன் கேப்டன் பேட் கம்மின்ஸ் அதிகபட்சமாக 5 விக்கெட்களை எடுத்துள்ளார். இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜாஸ் பட்லர், 58 பந்துகளில் 39 ரன்களும்; ஓலி போப் 79 பந்துகளில் 35 ரன்களும் எடுத்துள்ளார்கள்.

இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்ய இருந்த நிலையில், மழை குறுக்கிட்டதால் போட்டி நிறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக முதல் போட்டியில் வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தசைப்பிடிப்பு காரணமாக களமிறங்க மாட்டார் என இங்கிலாந்து அணி நிர்வாகம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.