விளையாட்டு

அசத்தினார் அய்யர்; போராடி வென்றது டெல்லி!

webteam

ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்று நடந்த போட்டியில் டெல்லி அணி வெற்றிப்பெற்றது. அந்த அணியின் ஸ்ரேயாஸ் அய்யர் 96 ரன்கள் விளாசி அசத்தினார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் குஜராத் அணியும் டெல்லி அணியும் நேற்று மோதின. கான்பூரில் ‌நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. பேட்டிங் செய்த குஜராத் அணி 5 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஆரன் ஃபின்ச் 39 பந்துகளில் 69 ரன்கள் விளாசினார். தினேஷ் கார்த்திக் 40 ரன்கள் எடுத்தார். டெல்லி அணி தரப்பில் முகமது ஷமி, கம்மின்ஸ், அமித் மிஸ்ரா, பிராத்வெய்ட் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடிய டெல்லி அணி 19.4 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஸ்ரேயாஸ் அய்யர் 57 பந்துகளில் 15 பவுண்டரி, 2 சிக்சருடன் 96 ரன்கள் எடுத்து செஞ்சுரி வாய்ப்பை இழந்தாலும் அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். 3 விக்கெட்டுகள் எஞ்சியிருந்த நிலையில் கடைசி ஓவரில் 9 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை டெல்லிக்கு ஏற்பட்டது. முதல் பந்தில் இரண்டு ரன்கள் எடுத்த அய்யர், இரண்டாவது பந்தில் விக்கெட்டை இழந்தார். அடுத்து களமிறங்கிய அமித் மிஸ்ரா அடுத்தடுத்து பவுண்டரிகள் விளாச, டெல்லி அணி வெற்றியை ஈட்டியது.

12-வது ஆட்டத்தில் ஆடிய டெல்லி அணி பெற்ற 5-வது வெற்றி இதுவாகும். 13-வது ஆட்டத்தில் ஆடிய குஜராத் அணி சந்தித்த 9-வது தோல்வி இதுவாகும்.