விளையாட்டு

இலங்கையில் திடீர் ஹீரோவான புதுமாப்பிள்ளை!

webteam

இந்திய கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை கைப்பற்றிய பிறகு, 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளை வென்று அடுத்தப் போட்டியையும் வெல்லும் முனைப்பில் இருக்கிறது இந்திய அணி. 

நேற்று நடந்தப் போட்டியில், இலங்கை அணி கிட்டத்தட்ட வெற்றியின் அருகில் சென்று திரும்பியது. அதற்கு காரணம், அந்த அணியின் இளம் சுழற்பந்துவீச்சாளர் அகிலா தனஞ்செயா. 

இந்திய அணியின், ரோகித், கேதர் ஜாதவ், கேப்டன் கோலி, ராகுல், ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் படேல் ஆகியோர் விக்கெட்டுகளை அடுத்தடுத்து அள்ளினார் இவர். இருந்தாலும் தோனியும் புவனேஷ்குமாரும் நிதானமாக ஆடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

6 விக்கெட்டுகளை அடுத்தடுத்து எடுத்த அகிலா தனஞ்செயாவுக்கு புதன்கிழமைதான் திருமணம் நடந்திருக்கிறது. இதற்காக கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இலங்கை டீமில் இருந்து, அவரது சொந்த ஊரான மொரட்டுவாவுக்குச் சென்றார். கண்டியில் இருந்து 150 கி.மீ தூரத்தில் உள்ள இந்த ஊரில் புதன்கிழமை காலையில் அவருக்கு கல்யாணம். இதில் இலங்கை அணியின் ரங்கனா ஹெராத், அனந்தா மெண்டிஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 காலையில் திருமணம் முடிந்ததும் மாலையிலேயே அணிக்கு திரும்பிவிட்டார். புதன்கிழமை இரவு 11 மணிக்கு அணியில் இணைந்த இவர், நேற்று ஆட்டநாயகன் விருதை பெற்றார். இதை அவரது புது மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர் மைதானத்தில் இருந்து ரசித்தனர். 
கல்யாண பரிசு!