விளையாட்டு

விஜய் சங்கர் மீது அதிக நம்பிக்கை வைக்கிறதா இந்திய அணி?

rajakannan

உலகக் கோப்பை தொடரில் தமிழக வீரர் விஜய் சங்கருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றதை அடுத்து உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்படைந்துள்ளது. இந்திய அணி இதுவரை விளையாடியுள்ள மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டி மட்டும் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. தென்னாப்ரிக்கா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா என வலுவான அணிகளை இந்தியா வெற்றி கண்டுள்ளது. சவுதாம்டனில் இன்று நடைபெற்று வரும் போட்டியில் ஆப்கான் அணியுடன் விளையாடி வருகிறது. 

இன்றையப் போட்டியிலும் தமிழக வீரர் விஜய் சங்கருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஷிகர் தவானுக்கு காயம் ஏற்பட்டத்தை அடுத்து தொடக்க வீரர் இடத்துக்கு கே.எல்.ராகுல் களமிறங்கினார். அணியில் இடம் காலியானதை அடுத்து யார் உள்ளே வருவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் டாஸ் கூட போடாததால் யார் அணிக்குள் இறங்கப்போகிறார் என்பது அப்போது தெரியவில்லை. பின்னர், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில்தான் நான்காவது இடத்திற்கு விஜய் சங்கர் விளையாடினார். அந்தப் போட்டியில் பேட்டிங்கில் 15 ரன்களை மட்டுமே எடுத்த அவர், பந்துவீச்சில் அசத்தினார். உலகக் கோப்பை தொடரில் தன்னுடைய முதல் பந்திலேயே விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். 5.2 ஓவர்கள் வீசி 22 ரன்கள் விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்களை சாய்த்தார்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் விஜய் சங்கருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதனால், குறைவான அனுபவமுள்ள விஜய் சங்கருக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு வழங்கப்படுவது குறித்து விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. ஷிகார் தவான் அதிகாரப்பூர்வமாக அணியில் இருந்து நீக்கப்பட்ட ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டார். அதனால், இந்தப் போட்டியில் பண்ட்க்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அதேபோல், மற்றொரு தமிழக வீரரான தினேஷ் கார்த்திக்கு இந்தப் போட்டியில் வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வியும் இருந்தது. 

இருப்பினும், விஜய் சங்கருக்கு இந்திய அணி வாய்ப்பு கொடுப்பதற்கு சரியான காரணங்கள் இல்லாமல் இல்லை. தற்போது இந்திய அணி 4வது இடத்திற்கு சரியான பேட்ஸ்மேன் தேவை. தோனியை தற்போது களமிறக்கும் யோசனை இந்திய அணிக்கு இல்லை. தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட் அந்த இடத்தினை நிரப்புவார்களா என்பது சந்தேகமே. சில போட்டிகள் என்றாலும் விஜய் சங்கர் அந்த இடத்தில் சரியாக விளையாடியுள்ளார். குறிப்பாக ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட போட்டியில் அவர் சிறப்பாக விளையாடியிருந்தார். 

விஜய் சங்கர் களமிறக்கப்பட மற்றொரு காரணம் பந்துவீச்சு. அவர் ஒரு ஆல்ரவுண்டராக இருக்கிறார். ஹர்திக் பாண்ட்யா உடன் சேர்த்து இவரும் 10 ஓவர்கள் வீச வாய்ப்புள்ளது. ரவீந்திர ஜடேஜா ஆல்ரவுண்டர் தான். இருப்பினும், அவர் ஒரு சுழற்பந்துவீச்சாளர். ஏற்கெனவே சாஹல், குல்தீப் என இரண்டு சுழற்பந்துவீச்சாளர்கள் உள்ளனர். அதனால், மீடியம் பேஸ் பந்துவீச்சாளராக விஜய் சங்கரை அணி நிர்வாகம் தேர்வு செய்திருக்கலாம். மற்றவர்களை தாண்டி விஜய்சங்கர் வசம் வாய்ப்பு வந்துவிட்டது. இனி தனக்கு கிடைத்த வாய்ப்பினை விஜய் சங்கர்தான் நிரூபிக்க வேண்டும் என்பதுதான் பாக்கி.