விளையாட்டு

“தலையா கொக்கா”..! ப்ராவோவிற்கு சவாலில் தண்ணிகாட்டிய தோனி!

webteam

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியும், ப்ரவோவும் 3 ரன்கள் ஓடும் போட்டியில் ஈடுபட்டனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஐதராபாத் அணியை இறுதிப்போட்டியில் வீழ்த்தி கோப்பையை வென்றுள்ளது. இந்தப் போட்டியில் வாட்சன் 117 ரன்கள் எடுத்து, சென்னைக்கு எளிதான வெற்றியை பெற்றுக்கொடுத்துவிட்டார். இதனால் நேற்று அவரது பெயர் ட்ரெண்டிங்கில் இருந்தது. இருப்பினும் கோப்பையை வென்றதற்கு காரணம் தோனிதான் என அனைவரும் புகழ்ந்து வந்தனர். ஏனெனில் இறுதிப்போட்டி வரைக்கும் சென்னை வந்ததற்கு காரணம் தோனியின் தலைமை தான், எனக்கூறப்பட்டது.

இதுதவிர தோனிக்கு என தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளனர். அதற்கு காரணம் அவரது கேப்டன்ஷிப் மட்டுமல்ல; எந்த நேரத்தில், இக்கட்டான சூழ்நிலையில் அவர் நிதானமாக இருப்பார். வெற்றி பெற்றால் உணர்ச்சிவசப்பட மாட்டார். தோல்வியடைந்தால் தளரந்து போக மாட்டார். ஆட்டம் பரபரப்பான நிலையில் இருக்கும் போது, கூலாக இருப்பார். எதையும் எளிமையாக எடுத்துக்கொள்வார். அவர் பேட்டிங் செய்ய களமிறங்கினால், போட்டியின் நிலையை உணர்ந்து விளையாடுவார். 

அனைத்து நேரங்களிலும் அதிராடியாக விளையாட மாட்டார். அதேபோன்று அடித்து விளையாட வேண்டிய நேரங்களில் அதிரடி காட்டுவார். குறிப்பாக அவர் பேட்டிங் செய்யும் போது, எதிர்பக்கத்தில் விளையாடும் பேட்ஸ்மேன் ஓடியே களைத்துவிடுவார். ஏனெனில் தோனி 6, 4 என பவுண்டரிகள் அடிப்பதை விட, ஒன்று, 2, 3 என ஓடியே அதிகம் ரன்கள் சேர்ப்பார். அவரது ஓட்டத்தின் வேகம் அனைவரையும் ஆச்சர்யப்பட வைக்கும். இதற்கு காரணம் அவர் உடலை கட்டுக்கோப்பாக பராமரித்து வருவதுதான்.

சில மாதங்களுக்கு முன்னர் தோனியும், ஹர்திக் பாண்டியாவும் விளையாட்டாக ஓட்டப்பந்தயத்தில் ஈடுபட்டனர். அதில் கூட இளைஞரான ஹர்திக் பாண்டியாவை விட வேகமாக ஓடி தோனி ஜெயிப்பார். அப்போது வயசானாலும் ‘தல, தல தான்’ என அவரது ரசிகர்கள் மார்தட்டிக்கொண்டனர். இந்நிலையில் அதேபோன்று தற்போது, நேற்று இறுதிப்போட்டி நடைபெற்ற மைதானத்தில் தோனியும், ப்ராவோவும் 3 ரன்கள் ஓடும் போட்டியில் ஈடுபட்டனர்.

இதில் யார் வெற்றிபெறுவார் என்பதை கணிக்க முடியாத வகையில் இருவரும் ஓடினர். ஆனால் கடைசி நொடியில் ப்ராவோவை தோனி முந்தி வெற்றி பெற்றார். இந்த வீடியோ சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.