விளையாட்டு

"ரூ.4 கோடியை ஏமாற்றிவிட்டார்"-சென்னை தொழிலதிபர் மீது ஹர்பஜன் சிங் புகார் !

jagadeesh

சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ரூ.4 கோடி கடன் வாங்கி விட்டு மோசடி செய்ததாக இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் புகார் கொடுத்துள்ளார்.

இது குறித்து ஹர்பஜன் சிங் சென்னை மாநகர காவல் துறையிடம் அளித்திருந்த புகாரில் " சென்னை உத்தண்டியைச் சேர்ந்த மகேஷ் என்ற தொழிலதிபர் நண்பர்கள் மூலம் அறிமுகமானார். தொழிலை விருத்தி செய்யப்போவதாகத் தெரிவித்து 2015ஆம் ஆண்டு என்னிடம் ரூ.4 கோடி கடன் வாங்கினார். அதன்பின்பு, அவரை என்னால் தொடர்புக் கொள்ள முடியவில்லை. நீண்ட நாட்களுக்குப் பிறகு கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி 25 லட்ச ரூபாய்க்கான செக் வழங்கினார். ஆனால் அந்த செக் பவுன்ஸ் ஆனது என தெரிவித்திருந்தார்.

ஹர்பஜன் சிங்கின் புகார் மனு மீது சென்னை நீலாங்கரை காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஸ்வரையா தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், மகேஷ் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பினார். இதனால், குற்றம்சாட்டப்பட்ட தொழிலதிபர் மகேஷ் தனது வழக்கறிஞர்கள் மூலம் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது.

பண மோசடி குறித்து மகேஷ் கூறும்போது "சென்னைக்கு அருகில் உள்ள தாளம்பூரில் உள்ள எனது அசையா சொத்துக்களை பிணையாக வைத்துதான் ஹர்பஜன் சிங்கிடம் பணம் பெற்றேன். இதற்காக திருப்போரூரில் உள்ள சார் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளோம். ஆவண எண் 3635/2015. ஹர்பஜன் சிங்கிற்கு வழங்கவேண்டிய நிலுவைத் தொகையை முழுமையாகச் செலுத்திவிட்டேன்" என கூறியுள்ளார்.