Surya kumar yadav, Rohit sharma PT
கிரிக்கெட்

ரோகித் சர்மா, சூர்ய குமார் அதிரடி - இங்கிலாந்து அணிக்கு 172 ரன்கள் இலக்கு; கட்டுப்படுத்துமா இந்தியா?

Rajakannan K

டி20 உலகக்கோப்பையில் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதிப் போட்டியில் கயானாவில் நடைபெற்று வருகிறது. மழை காரணமாக போட்டி தொடங்குமா இல்லையா என்ற நிலை தொடக்கத்தில் இருந்தது. இருப்பினும் போட்டி தாமதமாக தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பட்லர் பந்துவீச்சு தேர்வு செய்ய இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

மழை காரணமாக பந்து மிகவும் மெதுவாக வந்ததால் அதிரடியாக ரன் குவிக்க முடியவில்லை. ஒரு சிக்ஸர் விளாசி நம்பிக்கை கொடுத்த விராட் கோலி உடனடியாகவே 9 ரன்களில் நடையைக் கட்டினார்.

நடப்பு உலகக்கோப்பையில் மீண்டும் ஒரு சொதப்பலான ஆட்டத்தை அவர் ஆடினார். அவரை தொடர்ந்து வந்த ரிஷப் பண்ட்டும் 4 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.

பின்னர், ரோகித் சர்மா உடன் சூர்ய குமார் யாதவ் ஜோடி சேர ஆட்டத்தில் அதிரடி தொற்றிக் கொண்டது. இருவரும் பவுண்டரிகள் அடிக்கத் தொடங்கினர். ஆட்டத்தில் அதிரடி தொடங்கிய நேரத்தில் மழை குறுக்கிட்டது. 8 ஓவர்களில் 65 ரன்கள் எடுத்தநிலையில் ஆட்டத்தில் மீண்டும் மழை குறுக்கிட்டது. மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டு அரை மணி நேரம் கழித்து மீண்டும் தொடங்கியது. ரோகித் சர்மாவும், சூர்ய குமார் யாதவும் அதிரடியில் பட்டையை கிளப்பினர். சிக்ஸர்களையும் விளாசினர். பந்துகள் அடிக்க சிரமமாக இருந்தாலும் ரன் ரேட் குறையாமல் பார்த்துக் கொண்டனர்.

36 பந்துகளில் அரைசதம் விளாசினார் ரோகித் சர்மா. தொடர்ந்து அதிரடியாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 2 சிக்ஸர், 6 பவுண்ரிகளுடன் 57 ரன்களில் ஆட்டமிழந்தார் ரோகித் சர்மா. அவரை தொடர்ந்து அதிரடியின் நம்பிக்கையாக இருந்த சூர்ய குமார் யாதவ் 47 ரன்னில் அரைசதத்தை நழுவ விட்டு ஆட்டமிழந்தார். களத்தில் பார்மில் இருந்த இருவீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தனர்.

துணைக் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா வந்த வேகத்தில் ஒரு பவுண்டரி 2 சிக்ஸர்கள் விளாசி 23 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்த பந்திலேயே கோல்டன் டக் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார் ஷிவம் துபே.

ஜடேஜா 17*, அக்‌ஷர் 10 ரன்கள் எடுக்க இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்துள்ளது.

இங்கிலாந்து அணி தரப்பில் ஜோர்தன் 3 விக்கெட் சாய்த்தார். அடில் ரஷித் மற்றும் லிவிங்ஸ்டன் சிறப்பாக பந்துவீசி ரன்களை கட்டுப்படுத்தினர்.