suryakumar yadav web
கிரிக்கெட்

“உங்கள் மகனுக்கும்,சகோதரனுக்கும் கற்றுக்கொடுங்க”-பெண்களுக்கு எதிரான குற்றத்திற்காக SKY சாட்டை பதிவு!

Rishan Vengai

கொல்கத்தா நகரில் கடந்த வாரம் ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பெண் முதுகலை பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பெண் பயிற்சி மருத்துவர் இரவுப் பணியில் இருந்தபோது, ​​கருத்தரங்கில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டது பிரேதப் பரிசோதனை அறிக்கையின் மூலம் தெரியவந்த நிலையில், இதுதொடர்பாக சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார்.

இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இதற்கு நியாயம் கேட்டு மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, இந்தக் கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு, மத்திய புலனாய்வு அமைப்பு விசாரணையை தொடங்கியுள்ளது. மேலும், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் வெளிவந்த தகவல்களை வைத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை நடந்திருப்பதாகவும் இக்கொலை சம்பவத்தில் மருத்துவமனைக்கு உள்ளேயும் சிலருக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர்களையும் கைது செய்ய வேண்டும் எனவும் மாணவியின் பெற்றோர் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

கொல்கத்தா மருத்துவர் கொலை

நாளுக்கு நாள் கொலை சார்ந்த விசயங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்திவரும் நிலையில், இந்திய கிரிக்கெட்டர்களான ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா இருவரும் தங்களுடைய கண்டனத்தையும், ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியிருந்தனர்.

சூர்யகுமார் பதிவிட்ட இன்ஸ்டாகிராம் ஸ்டோரி..

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் இருந்துவரும் நிலையில், பும்ரா மற்றும் ஸ்ரேயாஸ் இருவரும் ஆதங்கத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், மற்றொரு இந்திய கிரிக்கெட் வீரரான சூர்யகுமார் யாதவும் தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவருடைய பதிவு ஒட்டுமொத்த சமூகத்திற்குமானதாக பிரதிபலித்துள்ளது.

சூர்யகுமார் யாதவ்

தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டிருக்கும் அவர், உங்கள் மகளை பாதுகாப்புடன் வைத்திருங்கள் என்ற வாக்கியம் அடிக்கப்பட்டு, உங்கள் மகனுக்கும், சகோதரர்களுக்கும், கணவருக்கும், ஆண் நண்பர்களுக்கும் மற்றும் உங்கள் அப்பாவுக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை செய்யாமல் இருக்க கற்றுக் கொடுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

சூர்யகுமார் யாதவின் பதிவை பார்த்த ரசிகர்கள் பாராட்டிவருகின்றனர்.