குசால் மெண்டிஸ், சதீரா சமரவிக்ரமா twitter
கிரிக்கெட்

உலகக்கோப்பை: ஒரே போட்டியில் இலங்கை அணி 6 சாதனைகள்!

Prakash J

இந்தியாவில் நடைபெற்று வரும் 13வது ஆடவர் உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா, ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறது. அந்த வகையில், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 8வது லீக் போட்டி இன்று, ஐதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னாள் சாம்பியன்களான இலங்கையும் பாகிஸ்தானும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

குசால் மெண்டிஸ், சதீரா சமரவிக்ரமா

முதலில் பேட் செய்த இலங்கை அணி!

டாஸ் ஜெயித்த இலங்கை அணி, முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி, இலங்கை அணியின் தொடக்க வீரர் குசல் பெரேரா டக் அவுட் ஆகி வெளியேற, இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த குசால் மெண்டிஸ் - பதும் நிஷாங்கா ஜோடி அபாரமாக விளையாடி ரன்களைச் சேர்த்தனர்.

பதும் நிஷாங்கா 51 ரன்களில் வெளியேறினாலும், பின்னர் களமிறங்கி குஷால் மெண்டிஸ் உடன் கைகோர்த்த சதீரா சமரவிக்ரமா ஜோடி, நல்ல பங்களிப்பைத் தந்தது. இருவரும் சதம் அடித்தததுடன் இலங்கை அணி தரப்பில் சில சாதனைகளும் செய்யப்பட்டன. இறுதியில் இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 344 ரன்கள் எடுத்தது.

இதையும் படிக்க: "சாதி, பாலின ரீதியாக என்மீது தாக்குதல்"- புதுச்சேரி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த சந்திர பிரியங்கா

தற்போது கடினமான இலக்கை நோக்கி, பாகிஸ்தான் அணி விளையாடி வருகிறது. இந்தச் சூழலில், இலங்கை அணி, இன்று செய்த சில சாதனைகளைப் பார்ப்போம்.

உலகக்கோப்பை 2023: பாகிஸ்தானுக்கு எதிராக இலங்கை அணி படைத்த சில சாதனைகள்!

குசால் மெண்டிஸ்

உலகக்கோப்பை தொடரில் இன்று, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி, 9 விக்கெட் இழப்புக்கு 344 ரன்கள் எடுத்தது.

உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக அதிக ரன்கள் (344) எடுத்த அணிகளில் இலங்கையே முதலிடம் பிடித்துள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா 336 ரன்களையும், இங்கிலாந்து 334 ரன்களையும் எடுத்து அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

இன்றைய போட்டியில் 344 ரன்கள் எடுத்ததன் மூலம் உலகக்கோப்பை தொடரில் 3வது முறையாக இலங்கை அணி, அதிக ரன்களை எடுத்துள்ளது. ஏற்கெனவே 1996-ல் 398/5 ரன்களையும், 2015-ல் 363/9 ரன்களையும் எடுத்துள்ளது.

இதையும் படிக்க: வங்கிக் கணக்கில் இருந்து 1 லட்ச ரூபாய் பணம் திருட்டு... தயாநிதி மாறன் புகார்

குசால் மெண்டிஸ் செய்த சில சாதனைகள்!

உலகக்கோப்பை தொடரில், இலங்கையைச் சேர்ந்த இரு வீரர்கள் இணைந்து சதம் அடிப்பது, நான்காவது முறையாக நிகழ்ந்துள்ளது. இன்று குசால் மெண்டில் (122), சதீரா சமரவிக்ரமா (108) ஆகியோர் சதமடித்திருந்தனர்.

உலகக்கோப்பை தொடரில் அதிவேக சதமடித்த வீரர்களின் பட்டியலில் குசால் மெண்டிஸ், 6வது இடத்தைப் பிடித்துள்ளார்.

குசால் மெண்டிஸ்

உலகக்கோப்பை தொடரில் இலங்கை அணியின் குசால் மெண்டிஸ் இலங்கை அணிக்காக அதிவேகமாக சதமடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார். அவர் 65 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். முன்னதாக, குமார் சங்ககரா 70 பந்துகளில் சதம் விளாசியதே சாதனையாக இருந்தது.

உலகக்கோப்பை தொடரில் இலங்கை அணியின் விக்கெட் கீப்பர் எடுத்த அதிகபட்ச ரன்களிலும் மெண்டிஸ் (122) 2வது இடம்பிடித்தார். இதில் 124 ரன்களுடன் குமார் சங்ககரா முதல் இடத்தில் உள்ளார்.

இதையும் படிக்க: உலகக்கோப்பை: வங்கதேசத்தை வீழ்த்தி இங்கிலாந்து முதல் வெற்றி!