Ind vs Pak Twitter
கிரிக்கெட்

“இந்தியா வரவில்லை என்றால் கிரிக்கெட் முடிந்துவிடாது; அவர்கள் இல்லாமல் விளையாடுவோம்” - PAK வீரர்

Rishan Vengai

கடந்த 2008-ம் ஆண்டு ஏற்பட்ட மும்பை தாக்குதலுக்கு பிறகு இந்திய அணி பாகிஸ்தானுக்கு சென்று விளையாடுவதை தவிர்த்து வருகிறது. 2008 ஆசியக்கோப்பைக்கு பிறகு இந்திய அணி பாகிஸ்தானுக்கு சென்று எந்தவிதமான போட்டிகளிலும் விளையாடவில்லை, அதேபோல இரண்டு அணிகளும் பங்கேற்று விளையாடிய இருதரப்பு தொடர் கடந்த 2006-ம் ஆண்டு நடந்ததே கடைசியாக இருந்துவருகிறது.

இதற்கிடையில் பல தொடர்கள் பாகிஸ்தானில் நடைபெற்றாலும் இரு அணிகளுக்கு இடையேயான போட்டிகள் மட்டும் பொதுவான ஆடுகளங்களில் மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது. “இந்திய அணி பாகிஸ்தானுக்கு வந்து விளையாடாவிட்டால் பாகிஸ்தான் அணியும் 2023 ஒருநாள் உலகக்கோப்பைக்கு இந்தியாவிற்கு வந்து விளையாடாது” என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியது. ஆனாலும் ஐசிசியின் அழுத்தம் காரணமாக பாகிஸ்தான் அணி இந்தியாவிற்கு வந்து 2023 உலகக்கோப்பையில் பங்கேற்றது.

champions trophy

இந்நிலையில் 2025 சாம்பியன்ஸ் டிரோபி தொடர் பாகிஸ்தானில் நடைபெறவிருப்பதால், இந்திய அணி பாகிஸ்தானுக்கு சென்று விளையாடாது என்று கூறப்படுகிறது. அதனால் இந்திய அணி பாகிஸ்தானுக்கு வந்து விளையாடவேண்டும் என ஷாகித் அப்ரிடி முதலிய முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் கோரிக்கை வைத்துவருகின்றனர். ஆனால் பாகிஸ்தானில் பாதுகாப்பில்லை என்றால் இந்திய அணியை அனுப்ப மாட்டோம் என ஹர்பஜன் நேரலை நிகழ்ச்சியில் காட்டமாக கூறியுள்ளார்.

ind vs pak captains

இத்தகைய சூழலில், “இந்தியா பாகிஸ்தானுக்கு வந்து விளையாடவில்லை என்றால் கிரிக்கெட் ஒன்றும் முடிந்துவிடாது, அவர்கள் இல்லாமலேயே விளையாடுவோம்” என்று பாகிஸ்தான் வீரர் ஒருவர் நேரலை உரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இந்தியா இல்லை என்றால் கிரிக்கெட் முடிந்துவிடாது..

இந்திய அணி பாகிஸ்தான் வருவது குறித்து பேசியிருக்கும் பாகிஸ்தான் வீரர் ஹசன் அலி, "நாங்கள் இந்தியாவிற்கு விளையாடச் செல்கிறோம் என்றால், அவர்களும் பாகிஸ்தானுக்கு விளையாட வரவேண்டும். விளையாட்டை அரசியலில் இருந்து விலகிவைக்க வேண்டும் என்று எத்தனையோ முறை பலபேர் கூறிவிட்டனர். ஆனால் மற்றொரு கோணத்தில் பார்த்தால் இந்திய வீரர்கள் பலர் பாகிஸ்தானில் விளையாட விரும்புவதாக பேட்டிகளில் கூறியுள்ளனர். எனவே இந்திய அணி பாகிஸ்தான் வந்துவிளையாடும் விருப்பத்துடன் தான் இருக்கிறது, அவர்களின் வாரியம் ஒரு கொள்கையை வைத்துக்கொண்டு அணியை அனுப்பவேண்டாம் என்ற முடிவில் இருக்கின்றது. அவர்ளின் வாரியம் மற்றும் நாடு நினைத்தால் வந்து விளையாடலாம்” என்று ஹசன் சாமா டிவி நிகழ்ச்சி ஒன்றின் நேரலை உரையாடலில் கூறினார்.

hasan ali

ஒருவேளை இந்தியா வரவில்லை என்றால் என்ற கேள்விக்கு பதிலளித்த ஹசன் அலி, “எங்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஏற்கனவே கூறியது போல், சாம்பியன்ஸ் டிரோபி பாகிஸ்தானில் நடைபெறுவதாக இருந்தால், அது பாகிஸ்தானில் மட்டும்தான் நடக்கும். இந்தியா வர விரும்பவில்லை என்றால், அவர்கள் இல்லாமல் விளையாடுவோம். இந்தியா பங்கேற்க விரும்பவில்லை என்றால் கிரிக்கெட் ஒன்றும் முடிந்துவிடாது, இந்தியாவைத் தவிர இன்னும் பல அணிகள் உள்ளன” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

சாம்பியன்ஸ் டிரோபி எப்போது நடக்கவிருக்கிறது?

ஐசிசி தொடரான 2025 சாம்பியன்ஸ் டிராபியை பாகிஸ்தான் நடத்தவுள்ளது. 8 அணிகள் பங்கேற்கும் போட்டிகள் பிப்ரவரி 19-ம் தேதி முதல் மார்ச் 9-ம் தேதிவரை நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சாம்பியன்ஸ் டிராபி

பாகிஸ்தானில் மொத்தம் மூன்று மைதானங்கள் போட்டிகளின் போட்டிகளை நடத்துவதற்கு பட்டியலிடப்பட்டுள்ளன. இந்தியா இன்னும் எந்த அதிகாரப்பூர்வமான விருப்பத்தையும் தெரிவிக்காமல் இருந்துவருகிறது. தொடர்ந்து வீரர்கள் பாகிஸ்தான் செல்வது குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.