musheer khan cricinfo
கிரிக்கெட்

’One Man Show..’ சுப்மன் கில் அணியை பொளந்துகட்டிய முஷீர் கான்.. துலீப் டிராபியின் முதல் சதமடித்தார்!

Rishan Vengai

இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் போட்டிக்கான எதிர்காலத்தை ஆரோக்கியமாக மாற்றும் வகையில், கடந்த சில மாதத்திற்கு முன்பு பிசிசிஐ உடன் ஒப்பந்தத்தில் இருக்கும் அனைத்து இந்திய வீரர்களும் உள்நாட்டு கிரிக்கெட் தொடரில் பங்கேற்க வேண்டும் என்ற அறிவிப்பை பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அறிவித்தார்.

Duleep Trophy

அதன்படி உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களான புச்சி பாபு கிரிக்கெட் தொடர் முதற்கொண்டு துலீப் டிராபி வரை அனைத்து தொடர்களும் புதுப்பிக்கப்பட்டுள்ளன. புச்சி பாபு தொடர் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் முக்கியத்துவம் கொடுத்து நடத்தப்படுகிறது.

அதேபோல மண்டலவாரியான கிரிக்கெட்டாக நடத்தப்பட்ட துலீப் டிராபி இந்தியா ஏ, இந்தியா பி, இந்தியா சி, இந்தியா டி என நான்கு பிரிவுகளாக மாற்றப்பட்டு அதில் பிசிசிஐ ஒப்பந்தத்தில் இருக்கும் அனைத்து வீரர்களும் இடம்பெற்று விளையாடவிருக்கின்றனர்.

duleep trophy captains

இந்நிலையில், செப்டம்பர் 5-ம் தேதியான இன்று போட்டிகள் தொடங்கப்பட்டது. முதல் போட்டியில் இந்தியா ஏ, இந்தியா பி அணியையும், இரண்டாவது போட்டியில் இந்தியா சி, இந்தியா டி அணியையும் எதிர்த்து விளையாடிவருகிறது.

தனி ஆளாக சதமடித்து அணியை காப்பாற்றிய முஷீர் கான்..

துலீப் டிராபி தொடருக்கான முதல் சுற்று அணிகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தியா ஏ, இந்தியா பி, இந்தியா சி மற்றும் இந்தியா டி முதலிய நான்கு அணிகளின் கேப்டன்களாக சுப்மன் கில், அபிமன்யு ஈஸ்வரன், ருதுராஜ் கெய்க்வாட், ஸ்ரேயாஸ் ஐயர் முதலிய வீரர்கள் அறிவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், இன்று தொடங்கிய துலீப் டிராபியின் முதல் போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான இந்தியா ஏ அணி, அபிமன்யு ஈஸ்வரன் தலைமையிலான இந்தியா பி அணியை எதிர்த்து விளையாடியது.

முதலில் பேட்டிங் செய்த இந்தியா பி அணிக்கு எதிராக அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய இந்தியா ஏ பவுலர்கள், 94 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை கைப்பற்றி பேரடியை கொடுத்தனர். யஷஸ்வி ஜெய்ஸ்வால் 30 ரன்கள் அடித்தாலும், கேப்டன் அபிமன்யு 13, சர்பராஸ் கான் 9, ரிஷப் பண்ட் 7, நிதிஸ் ரெட்டி 0, வாசிங்டன் சுந்தர் 0, சாய் கிஷோர் 1 என அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினர். ரிஷப் பண்ட்டின் விக்கெட்டை ஒரு அற்புதமான கேட்ச் மூலம் எடுத்துவந்தார் சுப்மன் கில்.

அணியின் மற்ற நட்சத்திர வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினாலும், மறுமுனையில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இளம்வீரர் முஷீர் கான் 10 பவுண்டரிகள், 2 சிக்சர்களுடன் சதமடித்து அணியை மீட்டெடுத்தார். 19 வயதான முஷீர் கானுக்கு இது மூன்றாவது முதல் தரவரிசை கிரிக்கெட் சதமாகும்.

முதல்நாள் முடிவில் இந்தியா பி அணி 7 விக்கெட்டுகளுக்கு 202 ரன்களை எடுத்துள்ளது. புதுப்பிக்கப்பட்ட துலீப் டிராபியின் முதல் சதத்தை முஷீர் கான் பதிவுசெய்துள்ளார். அபாரமாக பந்துவீசிய கலீல் அகமது, ஆவேஷ் கான், ஆகாஷ் தீப் மூன்று பேரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.