மோர்னே மோர்கல் pt web
கிரிக்கெட்

இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் முன் இருக்கும் சவால்கள் என்ன?

Angeshwar G

கம்பீர் - மோர்னே மோர்கல்

தென்னாப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கல் இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் செப் 1 ஆம் தேதி முதல் பணியினைத் தொடங்குவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில தினங்களுக்கு முன்பே மோர்னே மோர்கல் இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட உள்ளார் என்ற தகவல் வெளியானது. லட்சுமிபதி பாலாஜி, வினய் குமார் மற்றும் ஜாகீர் கான் போன்றோரது பெயர்கள் பரிசீலனையில் இருந்த நிலையில், மோர்னே மோர்கலுக்கு கம்பீரின் ஆதரவு வலுவாக இருந்ததாக செய்திகள் வெளியாகின.

ஏனென்றால், இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரான கவுதம் கம்பீரும், மோர்னே மோர்கலும் கொல்கத்தா அணிக்காக இணைந்து விளையாடியுள்ளனர். அதுமட்டுமின்றி, லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்காக இணைந்து பணியாற்றியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மோர்கல் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளதால் சர்வதேச கிரிக்கெட் அனுபவமும் அவருக்கு இருக்கிறது. 2023 ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இவர் வழிகாட்டுதலின் கீழ் பாகிஸ்தான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்தடுத்த சவால்கள்

எப்படி இருந்தாலும், இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக மோர்னே மோர்கலுக்கு அடுத்தடுத்த சவால்கள் இருக்கின்றன. இந்திய அணியின் பந்துவீச்சு வலுவுடன் இருப்பதை அவர் உறுதி செய்துகொண்டே இருக்க வேண்டும். ஏனெனில், இந்திய அணி அடுத்த செப்டம்பர் அக்டோபர் மாதங்களுக்குள் வங்கதேச அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகளிலும், நியூசிலாந்து அணியுடன் 3 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட உள்ளது. இதைத் தாண்டி டி20 போட்டிகளும், ஆஸ்திரேலியா உடனான டெஸ்ட் தொடரும் இருக்கிறது. எனவே, மோர்னே மோர்கல் பதவியேற்ற காலம் என்பதை சவாலான காலம் என்றே சொல்லலாம்.

2006 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு எதிராக அறிமுகம் செய்யப்பட்ட நாளில் இருந்து தான் ஓய்வு பெறும் நாள் வரை எதிரணி பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தும் பந்துவீச்சாளராகவே மோர்னே மோர்கல் இருந்துள்ளார். 86 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 309 விக்கெட்களையும், 117 ஒருநாள் போட்டிகளில் 188 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார். 44 டி20 போட்டிகளிலும் 47 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பிற்காக பிற அணி வீரர்களாலும் மதிக்கப்பட்டவர் மோர்னே மோர்கல். 2018 ஆம் ஆண்டே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும், தென்னாப்பிரிக்க அணியின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களில் இவரும் இடம்பெறுவார்.