ind vs nz cricinfo
கிரிக்கெட்

IND vs NZ | நேற்று கனமழை.. இன்று விக்கெட் மழை.. நியூசிலாந்துக்கு எதிராக 46 ரன்னில் சுருண்ட இந்தியா!

Rishan Vengai

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் நியூசிலாந்து அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

ind vs nz

2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்திய அணிக்கு கடைசி இரண்டு தொடர்களாக நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா தொடர்கள் அமைந்திருக்கின்றன. இந்த இரண்டு தொடர்களிலும் இந்தியா வென்றுவிட்டால் நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுவிடும்.

2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியானது அடுத்தாண்டு ஜூன் 11 முதல் ஜுன் 15-ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. ஜுன் 16-ம் தேதி ரிசர்வ் டே ஆகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ind vs nz

இந்நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான முக்கியமான டெஸ்ட் தொடர் நேற்று பெங்களூரு ஸ்டேடியத்தில் தொடங்கிய நிலையில், முதல் டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டம் மழையால் தடைபட்டு பின்பு ரத்துசெய்யப்பட்டது.

46 ரன்னுக்கு ஆல்அவுட்டான இந்தியா..

முதல்நாள் ஆட்டம் நடக்காத நிலையில், இரண்டாம் நாளில் டாஸ் போடப்பட்டு இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தது. மழைபெய்து பந்தானது நன்றாக வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் நிலையில், இந்தியா பேட்டிங்கை தேர்வுசெய்து தவறு செய்தது.

அதை சரியாக பயன்படுத்திக்கொண்ட நியூசிலாந்து வீரர்கள் விக்கெட் வேட்டை நடத்தினர். ரோகித் சர்மா 2 ரன்னில் வெளியேறி விக்கெட் சரிவை தொடங்கிவைத்தார், அடுத்து களமிறங்கிய விராட் கோலி மற்றும் சர்பராஸ் கான் இருவரும் 0 ரன்னில் வெளியேறி ரோகித் சர்மாவை பின் தொடர்ந்தனர். அதற்குபின் களத்திற்கு வந்த எந்த வீரரும் சோபிக்கவில்லை, அடுத்தடுத்து வந்த கேஎல் ராகுல், அஸ்வின், ஜடேஜா அனைவரும் 0 ரன்னில் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தனர். அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 20 ரன்கள் அடித்தார்.

நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் மேட் ஹென்ரி அசத்தலாக பந்துவீசி 5 விக்கெட்டுகளும், வில்லியம் ஓரூர்கி 4 விக்கெட்டுகளும் கைப்பற்ற 31.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்தியா 46 ரன்களுக்கு ஆல்அவுட்டானது.

ஐபிஎல் வரலாற்றில் 49 ரன்கள் என்ற மிகக்குறைவான டோட்டலை ஆர்சிபி அணி வைத்திருக்கும் நிலையில், அந்த அணியின் மோசமான சாதனையானது பெங்களூரு மைதானத்திலேயே முறியடிக்கப்பட்டுள்ளது.

இந்தியா படைத்த மோசமான சாதனை..

ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் இந்திய அணியின் டாப் 7 பேட்ஸ்மேன்களில் 4 பேர் பூஜ்ஜியம் ரன்னில் சொந்த மண்ணில் வெளியேறியது இதுவே முதல்முறை.

இதற்கு முன் இரண்டுமுறை (1952, 2014) இங்கிலாந்து மண்ணில் மட்டுமே இந்திய பேட்ஸ்மேன்கள் இப்படி மோசமான முறையில் ஆட்டமிழந்தனர்.