Hardik Pandya Twitter
கிரிக்கெட்

“யாரிடமும் விளக்க வேண்டிய அவசியம் இல்லை; ஆனால்...” - தோல்விக்கு பின் ஹர்திக் பாண்டியா கூல் பேட்டி!

Justindurai S

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 5-வது மற்றும் இறுதி டி20 போட்டி நேற்று அமெரிக்காவின் ஃப்ளோரிடவில் நடைபெற்றது. இரண்டு அணிகளும் 2-2 என்ற புள்ளிக் கணக்கில் சமநிலையில் இருந்ததால் நேற்றைய போட்டியில் வெற்றி பெறும் அணியே தொடரை கைப்பற்றும் நிலை இருந்தது. இதனால் ரசிகர்கள் இந்த போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் ஆடிய இந்தியா 20 ஓவர்களில் 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனைத் தொடர்ந்து 166 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 18 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை அடைந்ததோடு டி20 தொடரையும் கைப்பற்றியது.

India vs West Indies

இந்நிலையில் இந்திய அணியின் தோல்வி குறித்து போட்டிக்கு பின் பேசிய ஹர்திக் பாண்டியா ”சில சமயங்களில் தோல்வியும் நல்லது தான். இதுபோன்ற சூழ்நிலைகளில் நமக்கு நாமே சவால்களை ஏற்படுத்தி முன்னேற முடியும் என்று நம்புகிறேன். பேட்டிங்கில் துவக்கம் நன்றாகவே இருந்தாலும் நான் ஆட வந்த போது அதிக அளவு நேரத்தையும் பந்துகளையும் எடுத்துக் கொண்டேன். இது நமது அணி விரைவாக ரன் குவிப்பதை பாதித்தது. அதற்கு முழு பொறுப்பையும் ஏற்றுக் கொள்கிறேன். முதல் பத்து ஓவருக்கு பிறகு விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. அணி வீரர்கள் நன்றாக ஆடியபோதிலும் ரன்கள் எடுக்க தவறி விட்டனர். வீரர்கள் இன்னும் கொஞ்சம் பொறுப்புடன் ஆடியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

ஒவ்வொரு தோல்வியின் மூலம் நமக்கு நாமே சவால்களை ஏற்படுத்திக் கொள்ள முடியும். இதன் காரணமாக வரும் காலங்களில் சிறப்பான ஆட்டத்தை கொண்டுவர முடியும் என நம்புகிறேன். இந்த தோல்வி குறித்து யாரிடமும் விளக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த தொடரில் இருந்து ஏராளமாக கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் இருக்கின்றன. இந்திய அணிக்காக களம் இறங்கிய ஒவ்வொரு வீரர்களும் தங்களது மிகச் சிறப்பான பங்களிப்பை அளித்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி மிகச் சிறப்பாக விளையாடி தொடர்ந்து எங்களுக்கு புதிய சவால்களை உருவாக்கிக் கொண்டே இருந்தது. புதிய திட்டங்களுடன் எங்களுக்கு மிகச் சிறந்த போட்டியை அவர்கள் வழங்கினார்கள்.

India vs West Indies

மேலும் இந்த தொடரில் இந்தியாவிற்காக களம் இறங்கிய இளம்வீரர்களின் பங்களிப்பு முக்கியமானது. அவர்கள் பலர் இதயங்களை வென்றுள்ளனர். சர்வதேச கிரிக்கெட்டில் இது மிகவும் முக்கியமான விஷயம். ஒவ்வொரு இளைஞனுக்கும் நம்பிக்கை இருக்கிறது. நான் இப்போது அடிக்கடி பார்க்கும் விஷயம் இந்த இளம் வீரர்களின் நம்பிக்கை. அவர்களுக்கு பாராட்டுக்கள், அவர்கள் பொறுப்பை ஏற்று ஆடுகின்றனர். முடிவுகளைப் பொருத்தவரை ஒரு கேப்டனாக என்னால் மகிழ்ச்சியாக இருக்க முடியாது” என்று கூறினார்.