Dhammika Niroshana web
கிரிக்கெட்

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுட்டுக்கொலை.. குடும்பத்தினர் முன்னிலையில் நேர்ந்த கோரம்!

Rishan Vengai

என்ன நடந்தது?

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் தம்மிக்க நிரோஷனா, ஜூலை 16 செவ்வாய்க்கிழமை அன்று இரவு காலி மாவட்டம், அம்பலாங்கொடாவில் உள்ள அவரது இல்லத்திற்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

41 வயதான முன்னாள் U19 இலங்கை கேப்டனான நிரோஷனா தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் இருந்தபோது, ​​அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பரிதாபமாக படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

நிரோஷனா மூத்த அணிக்கு விளையாடாதபோதிலும் யு19 காலகட்டத்தில் அவரது தலைமையின் கீழ் ஜொலித்தபோது ஃபர்வீஸ் மஹரூப், ஏஞ்சலோ மேத்யூஸ் மற்றும் உபுல் தரங்கா போன்ற திறமைகளை வளர்த்தெடுத்ததில் பெரிய பங்காற்றியுள்ளார். இலங்கை அணியை உயர்மட்டத்திற்கு கொண்டுவருவதற்கு காரணமாக அமைந்த கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை கொடூரமாகவும் எதிர்பாராத விதமாகவும் முடிவுக்கு வந்துள்ளது.

2000-ல் இலங்கையின் யு19 கேப்டன்!

தம்மிக்க நிரோஷனா 2000-ம் ஆண்டில் இலங்கை அணியில் U19 அணிக்காக அறிமுகமானார். தன்னுடைய அபாரமான ஆட்டத்தாலும் கேப்டன்சி திறமையினாலும் 2002-ம் ஆண்டு நியூசிலாந்தில் நடைபெற்ற U19 உலகக் கோப்பையில் அணியின் தலைவராக விரைவாக உயர்ந்தார். வேகப்பந்துவீச்சாளரான அவர் அந்த உலகக்கோப்பை தொடரில் ஐந்து இன்னிங்ஸ்களில் 19.28 சராசரியுடன் 3/38 என்ற சிறந்த ஸ்பெல்லுடன் ஏழு விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.

அவரது தலைமைத்துவமானது ஃபர்வீஸ் மஹரூப், ஏஞ்சலோ மேத்யூஸ் மற்றும் உபுல் தரங்கா போன்ற திறமைகளை வளர்த்தது, அவர்கள் இலங்கை அணியை மிக உயர்ந்த மட்டத்தில் பிரதிநிதித்துவப்படுத்தினர். நிரோஷனாவின் வாழ்க்கையில் 2001 முதல் 2004 வரை காலி கிரிக்கெட் கிளப்பிற்காக 12 முதல்தர ஆட்டங்கள் மற்றும் 8 லிஸ்ட்-ஏ போட்டிகளில் விளையாடி 300 ரன்களுக்கு மேல் எடுத்தார் மற்றும் 19 விக்கெட்டுகளை கைப்பற்றினார். சிறந்த கிரிக்கெட் வாழ்க்கையை பெற்றிருந்த போதிலும் 2004-ம் ஆண்டு அனைத்து விதமான கிரிக்கெட் வடிவங்களிலிருந்தும் ஓய்வை விரைவாகவே அறிவித்தார்.

தம்மிக்க நிரோஷனா

துப்பாக்கிச் சூடு நடத்தியவரை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான விசாரணைகள் நடைபெற்று வருவதாக இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது.