தினேஷ் கார்த்திக் எக்ஸ் தளம்
கிரிக்கெட்

“தோனியின் பெயரைச் சேர்க்காமல் தவறு செய்துவிட்டேன்” - வருத்தம் தெரிவித்த தினேஷ் கார்த்திக்!

Prakash J

இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த கேப்டனாகவும், விக்கெட் கீப்பர் பேட்டராகவும் விளங்கியவர் தோனி. அதனால், அவர் இன்றளவும் அனைவராலும் புகழப்படுகிறார். தவிர, அவரை வைத்தே பலரும் தங்களின் கனவு அணியைத் தேர்வு செய்கின்றனர்.

இந்த நிலையில் கடந்த சுதந்திர தினத்தின்போது, இந்திய முன்னாள் விக்கெட் கீப்பரும் தமிழக வீரருமான தினேஷ் கார்த்திக், தனது ஆல்-டைம் இந்தியா பிளேயிங் அணியைத் தேர்வு செய்திருந்தார். அதில் தோனியின் பெயர் இடம்பெறவில்லை. இதனால் வெறுப்புற்ற தோனியின் ரசிகர்கள் தினேஷ் கார்த்திக்கை இணையதளங்களில் ட்ரோல் செய்து வந்தனர். குறிப்பாக, “தோனி இல்லாமல் எப்படி ஒரு சிறந்த இந்திய அணியை அறிவிக்க முடியும்?” என சில ரசிகர்கள் தினேஷ் கார்த்திக் மீது கோபம் கொண்டனர்.

பலரும், தினேஷ் கார்த்திக் தனிப்பட்ட வெறுப்பால் தோனியின் பெயரை சிறந்த 11 வீரர்கள் கொண்ட இந்திய அணியில் சேர்க்கவில்லை என விமர்சனம் செய்தனர். இந்திய அணியின் கேப்டனாக தோனி செயல்பட்ட காலத்தில், தினேஷ் கார்த்திக் அணியில் இடம்பிடிக்க முயன்றார். அப்போது, தோனியின் விக்கெட் கீப்பிங்கும், கேப்டன்ஷிப்பும் பெரிய அளவில் பேசப்பட்டதால், அவருக்கு நிரந்தர இடம் கிடைக்காமல் போனது. அதேபோல், சி.எஸ்.கே. அணியில் இடம்பெறவும் தினேஷ் கார்த்திக் முயன்றார். அது, தோல்வியிலேயே முடிந்தது. காரணம், சி.எஸ்.கே. கேப்டனாக தோனி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த தனிப்பட்ட மன வருத்தத்தின் காரணமாகத்தான் தினேஷ் கார்த்திக் தோனி பெயரை விட்டிருக்க வேண்டும் என விமர்சனங்கள் எழுந்தன.

இதையும் படிக்க: கொல்கத்தா மருத்துவர் கொலை| கண்டெடுக்கப்பட்ட டைரி.. கிழிக்கப்பட்ட பக்கங்கள்.. சூடுபிடிக்கும் விசாரணை!

இந்த விஷயம் பூதாகரமானதைத் தொடர்ந்து தற்போது, அதற்கு தினேஷ் கார்த்திக் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர், "நான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன். உண்மையிலேயே அது தவறுதலாக நடந்த ஒரு விஷயம்தான். நான் பேசியது வீடியோவாக வெளிவந்த பின்னரே நான் அதை உணர்ந்தேன். நான் அந்த 11 வீரர்களை தேர்வு செய்யும்போது பல விஷயங்களை யோசித்தேன். ஆனால், ஒரு விக்கெட் கீப்பரைச் சேர்க்க மறந்துவிட்டேன். அந்த அணியில் ராகுல் டிராவிட்டை பகுதிநேர விக்கெட் கீப்பராக நான் சேர்த்ததாக சிலர் நினைத்துக்கொண்டு இருக்கிறீர்கள்.

உண்மையில் நான் அவரை விக்கெட் கீப்பராகச் சேர்க்கவில்லை. நான் விக்கெட் கீப்பரை சேர்க்க மறந்துவிட்டேன் என்பதுதான் உண்மை. இது மிகப் பெரிய தவறு. என்னைப் பொறுத்தவரை தோனி எந்த ஒரு கிரிக்கெட் அணியிலும் இடம்பெறக் கூடியவர். அது இந்திய அணி என்று இல்லை. கிரிக்கெட் ஆடியதிலேயே மிகப்பெரிய ஒரு ஜாம்பவான் அவர். அந்த அணியை நான் மீண்டும் தேர்வு செய்ய வேண்டும் என்றால், ஏழாம் வரிசையில் தோனியின் பெயரைச் சேர்ப்பேன். அவர்தான் அந்த அணியின் கேப்டனாகவும் இருப்பார்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: தினம் 993 முட்டை பஃப்ஸ் | CM ஆபீஸில் ரூ.3.62 கோடி ஊழல்.. சிக்கலில் ஜெகன் மோகன்? அதிரும் ஆந்திரா!