MS Dhoni x
கிரிக்கெட்

அக். 31-தான் கடைசி நாள்.. தோனியின் முடிவு என்ன? சிஎஸ்கே அதிகாரிகளை சந்திக்கும் MSD! விவரம்

Rishan Vengai

2025 ஐபிஎல் தொடரானது மெகா ஏலத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறது. எம்எஸ் தோனி, ரோகித் சர்மா முதலிய ஸ்டார் கேப்டன்களின் மூவ் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், 2025 ஐபிஎல் தொடரானது தற்போதே மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில் 2025 ஐபிஎல் ஏலத்திற்கான தக்கவைப்பு விதிகளை வெளியிட்ட பிசிசிஐ, தோனியை தக்கவைக்கும் விதத்தில் UNCAPPED PLAYER விதிமுறையை அறிமுகப்படுத்தி எல்லோரையும் ஆச்சரியத்தில் தள்ளியது. அதாவது, “சர்வதேச போட்டிகளில் இருந்து 5 ஆண்டுகளுக்கு முன் ஓய்வுபெற்ற இந்திய வீரர்கள் UNCAPPED PLAYER ஆக கருதப்படுவார்கள் என்றும், அவர்களை ஏலத்தில் தக்கவைத்துக்கொள்ளலாம்” என்ற விதி மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது. தோனி கடைசியாக 2019 உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தோனி

இதன்மூலம் மகேந்திர சிங் தோனி சிஎஸ்கே அணியில் அன்கேப்டு வீரராக தக்கவைக்கப்படுவார் என்ற எதிர்ப்பார்ப்பு எல்லோரிடத்திலும் எழுந்துள்ளது. ஒருவேளை தோனி 2025 ஐபிஎல் தொடரில் அன்கேப்டு வீரராக விளையாடும் பட்சத்தில் அவருக்கு 4 கோடி சம்பளம் வழங்கப்படும் என்றும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

2021-ம் ஆண்டு காலாவதியான விதிமுறையை மீண்டும் தோனிக்காக பிசிசிஐ கொண்டுவந்துள்ளதாக தினேஷ் கார்த்திக், அஸ்வின், ஷமி முதலியோர் தெரிவித்த நிலையில், எல்லோருடைய கண்ணும் தோனி விளையாடுவாரா? இல்லையா? என்ற கேள்விக்கு விடையை தேடிக்கொண்டிருக்கிறது.

உறுதிப்படுத்துவாரா தோனி.. சிஎஸ்கே நிர்வாகிகளுடன் சந்திப்பு..

சிஎஸ்கே அணிக்காக 5முறை ஐபிஎல் கோப்பைகளை வென்ற முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி, தன்னுடைய கேப்டன்சி மாற்றத்தை கூட வெளியில் முறையாக அறிவிக்கவில்லை. ருதுராஜ் கெய்க்வாட் பிரான்சைஸ் அணிகளுக்கான கேப்டன்கள் போட்டோஷூட்டில் கலந்துகொண்ட போது தான், எல்லோருக்குமே தோனி கேப்டன்சியை ருதுராஜிடன் ஒப்படைத்துவிட்டார் என்பதே தெரிந்தது.

அதேபோல சர்வதேச கிரிக்கெட் போட்டியிலும் அவர் திடீரென தான் ஓய்வை அறிவித்தார், அவருக்கான ஃபேர்வெல் என்ற ஒன்றை எப்போதும் அவர் எதிர்ப்பார்த்ததில்லை. அதன்படி 2025 ஐபிஎல் தொடரை விளையாடுவாரா இல்லையா என்பது குறித்து இன்னும் தோனி எதையும் உறுதிப்படுத்தவில்லை.

தோனி

ஒவ்வொரு ஃபிரான்சைஸ் அணிகளும் அவர்களுடைய தக்கவைக்கும் வீரர்களின் பெயரை அக்டோபர் 31-க்குள் சமர்ப்பிக்க வேண்டும். ஒருவேளை அன்றைய தேதியில் தோனியின் பெயர் தக்கவைப்பு பட்டியலில் இல்லையென்றால், தோனி இனிமேல் ஐபிஎல்லில் விளையாட மாட்டார் என்பது உறுதியாகிவிடும். ஒருவேளை தோனி விளையாட ஒப்புக்கொண்டால் நிச்சயம் சிஎஸ்கே அணி அவரை அன்கேப்டு வீரராக தக்கவைக்கும்.

தோனி

இந்நிலையில் Cricbuzz மேற்கோள் காட்டியிருக்கும் அறிக்கையின் படி, தோனி அக்டோபர் மாதம் நடுப்பகுதியில் சிஎஸ்கே அணியின் நிர்வாகிகளை சந்திக்கவிருக்கிறார். அப்போது 2025 ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா அல்லது இல்லையா என்பதை உறுதிப்படுத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தோனியின் முடிவு என்னவாக இருக்கும் என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.