மோர்னே மோர்கல் web
கிரிக்கெட்

”மோர்னே மோர்கல் எல்லாம் ஒரு ஆளா..?” பாகிஸ்தான் பவுலர்களின் மோசமான நடத்தை! முன்னாள் வீரர் வருத்தம்!

Rishan Vengai

இந்திய அணியின் புதிய பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டவர் மோர்னோ மோர்கல். தென்னாப்பிரிக்கா அணியில் வேகப்பந்துவீச்சில் கொடிகட்டி பறந்த மோர்னே மோர்கல், 2023 ஒருநாள் உலகக்கோப்பையின் போது பாகிஸ்தான் அணியின் பவுலிங் கோச்சாக பணியாற்றினார். அப்போது பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு கூட செல்லாமல் லீக் சுற்றோடு வெளியேறியது.

பாகிஸ்தான் அணியின் மோசமான செயல்பாட்டுக்கு பிறகு பல மாற்றங்களை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எடுத்தது. அதில் பவுலிங் கோச்சாக இருந்த மோர்னே மோர்கலும் கோச் பொறுப்பிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

மோர்னே மோர்கல்

இந்நிலையில், ஐபிஎல் தொடரில் தன்னுடன் சேர்ந்து பணியாற்றிய மோர்னே மோர்கலை இந்திய அணியின் பவுலிங் கோச்சாக இணைந்துகொண்டுள்ளார் இந்திய தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர். மோர்னே மோர்கலின் தலைமையில் அடுத்துவரவிருக்கும் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் இந்தியா விளையாடவிருக்கிறது.

மோர்னே மோர்கலை பாகிஸ்தான் பவுலர்கள் மதிக்கவில்லை..

தொடர்ந்து மோசமான வீழ்ச்சியை சந்தித்துவரும் பாகிஸ்தான் அணியில், வீரர்கள் ஒற்றுமை மிகப்பெரிய பிரச்னையாக இருந்துவருகிறது. சமீபத்தில் கூட ஷாஹீன் அப்ரிடி ஆடும் அணியிலிருந்து பெஞ்ச் செய்யப்பட்டார்.

பாகிஸ்தான் அணியில் ஒற்றுமை இல்லை என்பதை விமர்சித்திருந்த முன்னாள் வீரர்கள், “அணியிலிருக்கும் வீரர்களிடம் ஒற்றுமை இல்லையென்றால் வீரர்களை அணியிலிருந்து வெளியேற்றுங்கள், எதற்காக பயிற்சியாளர்களை மாற்றவேண்டும்” என்று விமர்சித்திருந்தனர்.

மோர்னே மோர்கல்

இந்நிலையில் மோர்னே மோர்கல் பாகிஸ்தான் அணியில் பவுலிங் கோச்சாக இருந்தபோது, பாகிஸ்தான் பவுலர்கள் மதிக்கவில்லை என்று முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட்டர் பாசித் அலி வெளிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து யூடியூப் வீடியோவில் பேசியிருக்கும் அவர், “பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் கிரிக்கெட்டை விட தாங்கள் பெரியவர்கள் என்று கருதுகிறார்கள். மோர்னே மோர்கல் பாகிஸ்தான் அணியில் பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்தபோது எங்களுக்கு முன்னால் அவர் ஒன்றுமில்லை என நினைத்தார்கள்” என்று வெளிப்படுத்தியுள்ளார்.

மோர்னே மோர்கல்

அணியின் மோசமான நிலைகுறித்து பேசிய அவர், “நாங்கள் அணியில் இருக்கும் வித்தியாசத்தை அறிந்து கொண்டோம். பாகிஸ்தான் அணி வங்கதேசத்துக்கு எதிராக விளையாடியபோது, முற்றிலும் பின் காலில் இருப்பது போல் தோன்றியது. பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்து வங்கதேசம் சாதித்து காட்டியது. ஆனால் இரண்டு அணிக்கும் இடையே மனநிலை மற்றும் சிந்தனை மாறுபட்டிருந்தது” என்று அவர் மேலும் கூறினார்.