ஆஷா சோபனா x
கிரிக்கெட்

33 வயதில் அறிமுகமான கேரளா வீராங்கனை.. ‘4 விக் + 2 ஓவர் மெய்டன்’! 122 ரன்னில் சுருட்டி IND வெற்றி!

Rishan Vengai

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள தென்னாப்பிரிக்க மகளிர் அணி, 3 ஒருநாள் போட்டிகள், 3 டி20 போட்டிகள் மற்றும் ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது.

ind w vs sa w

இந்தியா - தென்னாப்பிரிக்கா மகளிர் அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி, பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். ஸ்மிரிதி மந்தனாவின் அசத்தலான சதத்தால் முதல் இன்னிங்ஸில் 265 ரன்களை குவித்தது இந்திய அணி.

Smriti Mandhana

அதனைத்தொடர்ந்து விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி, இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 122 ரன்களுக்கு ஆல்அவுட்டாகி படுதோல்வியை சந்தித்தது.

33 வயதில் அறிமுகமான கேரள வீராங்கனை..

2024 மகளிர் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக விளையாடிய லெக் ஸ்பின்னரான ஆஷா சோபனா, விளையாடிய 10 இன்னிங்ஸ்களில் தன்னுடைய அபாரமான பந்துவீச்சு மூலம் 12 விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன் 5/22 என சிறந்த ஸ்பெல்லை வீசி அசத்தினார். இறுதிப்போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக 2 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஆஷா, வெற்றிக்கு பெரிய பங்காற்றினார்.

கேரளா திருவனந்தபுரத்தை சேர்ந்த 33 வயதான ஆஷா சோபனா, மகளிர் ஐபிஎல்லில் செய்த அபாரமான செயல்பாட்டிற்கு பிறகு வங்கதேசத்திற்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணிக்காக முதல் அறிமுகத்தை பெற்றார்.

asha sobhana

அதிலும் 3/18 என ஒரு மேட்ச் வின்னிங் ஸ்பெல் வீசிய ஆஷாவிற்கு, இன்றைய தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியிலும் அறிமுகம் கிடைத்தது. மிக அதிக வயதில் இந்திய அறிமுகத்தை பெற்ற வீராங்கனையாக ஆஷா சோபனா மாறியுள்ளார்.

அறிமுக போட்டியிலேயே 4 விக்கெட்டுகள்!

266 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி, இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தொடக்கத்திலேயே விக்கெட்டை இழந்து தடுமாறியது. ஸ்விங் மாஸ்டர் ரேனுகா சிங் முதல் ஓவரின் 4வது பந்திலேயே தென்னாப்பிரிக்கா கேப்டன் லாராவின் ஸ்டம்புகளை தகர்த்தெறிந்தார். அடுத்தடுத்து வந்த வீரர்களை தீப்தி மற்றும் பூஜா வெளியேற்ற 33 ரன்களுக்கு 3 விக்கெட்டை பறிகொடுத்து தடுமாறியது தென்னாப்பிரிக்கா.

ஆனால் அதற்குபிறகு கைக்கோர்த்த சுனே லஸ் மற்றும் மரிசன்னே கேப் இருவரும் அணியை சரிவிலிருந்து மீட்க போராடினர். நல்ல பார்ட்னர்ஷிப் சென்றுகொண்டிருந்த நேரத்தில் கேப்பை வெளியேற்றிய ஆஷா சோபனா தன்னுடைய முதல் விக்கெட்டாக நட்சத்திர வீரரை வெளியேற்றினார். மரிசன்னே கேப் வெளியேறியதும் அதற்குபிறகு ஆஷா சோபனா மிரட்டிவிட்டார்.

அடுத்தடுத்து 4 விக்கெட்டுகளை ஆஷா கைப்பற்ற, 122 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளை இழந்து ஆல்அவுட்டானது தென்னாப்பிரிக்கா அணி.

143 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்த காரணமான ஸ்மிரிதி மந்தனா பிளேயர் ஆஃப் தி மேட்ச் விருதை தட்டிச்சென்றார்.

ஸ்மிரிதி மந்தனாவின் 117 ரன்கள், ஆஷா சோபனாவின் 4/21 என்ற அசத்தலான ஆட்டத்தால் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.