சர்பராஸ் கான் - அபிமன்யூ ஈஸ்வரன் புதிய தலைமுறை
கிரிக்கெட்

‘இதுதான்யா மேட்ச்..’ - சர்பராஸ்கானின் 200* ரன்னுக்கு எதிராக 150* ரன்கள் அடித்த அபிமன்யூ ஈஸ்வரன்!

Rishan Vengai

2024 ரஞ்சிக்கோப்பை சாம்பியனான மும்பை அணிக்கும், ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்கும் இடையேயான இரானி கோப்பை போட்டியானது லக்னோவில் நடைபெற்றுவருகிறது.

அக்டோபர் 1ம் தேதி தொடங்கிய இரானி கோப்பையில் அஜிங்கியா ரஹானே தலைமையிலான மும்பை அணி, ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியை எதிர்த்து முதலில் பேட்டிங் செய்தது.

சர்பராஸ் கான்

முதல் இன்னிங்ஸில் மும்பை அணிக்காக விளையாடிய சர்பராஸ் கான் இரட்டை சதம் (222* ரன்கள்) விளாசி அசத்தினார். இரானி கோப்பையில் இரட்டை சதமடிக்கும் முதல் மும்பைவீரர் என்ற சாதனையையும் படைத்தார். உடன் ரஹானே 97 ரன்கள், ஸ்ரேயாஸ் ஐயர் 57 ரன்கள், தனுஷ் கோட்டியான் 64 ரன்கள் மற்றும் இறுதியாக வந்த ஷர்துல் தாக்கூர் 36 ரன்கள் என அசத்தியதில் 537 ரன்களை மும்பை அணி குவித்தது. சர்பராஸ் கான் 222* ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

மும்பைக்கு பதிலடி கொடுத்து 150* ரன்கள் குவித்த அபிமன்யூ..

மும்பையின் அசத்தலான ரன்குவிப்பிற்கு பிறகு முதல் இன்னிங்ஸை விளையாடிய ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியில், தொடக்க வீரராக களமிறங்கிய அபிமன்யூ ஈஸ்வரன் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஒருபக்கம் கேப்டன் ருதுராஜ் 9 ரன்கள், சாய் சுதர்சன் 32 ரன்கள், படிக்கல் 16 ரன்கள், இஷான் கிஷன் 38 ரன்கள் என வெளியேறினாலும், மறுபக்கம் நிலைத்துநின்று விளையாடிய அபிமன்யூ ஈஸ்வரன் 14 பவுண்டரிகள் 1 சிக்சர் என விளாசி 151* ரன்கள் குவித்தார்.

மூன்றாவது நாள் முடிவில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி 4 விக்கெட் இழப்புக்கு 289 ரன்களை சேர்த்துள்ளது. அபிமன்யூ 151 ரன்களுடனும், துருவ் ஜுரல் 30 ரன்களுடனும் களத்தில் நீடிக்கின்றனர்.

அபிமன்யூ ஈஸ்வரன் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். கடைசியாக பங்கேற்றிருந்த துலீப் டிரோபியின் இரண்டு போட்டிகளிலும் சதமடித்திருந்த ஈஸ்வரன், இரானி கோப்பையிலும் தொடர்ச்சியாக 3வது சதமடித்து அசத்தியுள்ளார்.

அபிமன்யூ ஈஸ்வரன் பலமுறை இந்திய அணியின் பெஞ்சில் கொண்டு செல்லப்பட்டாலும் ஒருமுறை கூட இந்தியாவின் தொப்பியை அணியவில்லை, விரைவில் அவர் இந்திய அணியில் விளையாட வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு இந்திய ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.