விளையாட்டு

‘சொந்த மண்’ வரும் சிஎஸ்கே சிங்கங்கள்: விசிலுடன் வரும் கோப்பை!

webteam

ஐபிஎல் கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள், குடும்பத்துடன் அணியின் சொந்த மண் சென்னைக்கு வருகின்றனர்.

2018ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐதராபாத் அணியை வென்று கோப்பையை கைப்பற்றியது. இறுதிப் போட்டியில் வாட்சனின் அதிரடி அதிர்வலை இன்னும் குறையவில்லை. தோனியின் கேப்டன்ஷிப் தான் சென்னை கோப்பையை வென்றதற்கு முக்கிய காரணம் என அனைவரும் புகழ்ந்து வருகின்றனர். கோப்பையை வென்றிருந்தாலும், சென்னையில் விளையாட முடியாமல் போனது வருத்தம் அளித்ததாக தோனி தெரிவித்திருந்தார்.

தோனி மட்டுமின்றி ஹர்பஜன் உள்ளிட்ட பல வீரர்களும் சென்னையில் விளையாட முடியாமல் போனதற்கு வருத்தம் தெரிவித்திருந்தனர். சென்னையில் விளையாடவில்லை என்றாலும், அனைத்து போட்டிகளிலும் அசத்தலான வெற்றியை பெற்று ரசிகர்களை உற்சாகப்படுத்தி வந்தது சென்னை அணி. இந்நிலையில் இறுதிப்போட்டியையும் வென்று கோப்பையை கைப்பற்றி, ரசிகர்களை கொண்டாட்ட மழையில் துள்ளவைத்துள்ளது. சென்னை நேற்று கோப்பையை வென்ற பிறகு, இன்று அணியின் சொந்த மண்ணான சென்னை வருவதாக அறிவிக்கப்பட்டது. 

அந்த அறிவிப்பின்படி சென்னை அணியின் வீரர்கள் மற்றும் ஐபிஎல் கோப்பையும் சென்னை வந்து கொண்டிருக்கின்றனர்.  அவர்களுக்கு வாழ்த்துகளுடன் உற்சாக வரவேற்பும் அளிக்கப்படவுள்ளது. சென்னை வந்துள்ள வீரர்கள் அனைவரும் மஞ்சள் நிற உடையில் வருகை தருகின்றனர்.