விளையாட்டு

யு-19 போட்டியை சென்னையில் நடத்த இயலாது: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்

webteam

இந்தியா- இங்கிலாந்து இடையேயான 19 வயதிற்குட்பட்ட (யு-19) டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2 ஆட்டங்களை சென்னையில் நடத்த இயலாது என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (டிஎன்சிஏ) தெரிவித்துள்ளது.

சென்னையில் கடந்த மாதம் நிகழ்ந்த வர்தா புயல் தாக்கத்தால் மைதானம் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. இதனால் திட்டமிட்டபடி இந்தியா- இங்கிலாந்து இடையேயான (யு-19) டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2 ஆட்டங்களை சென்னையில் நடத்த இயலாது என்று டிஎன்சிஏ உறுப்பினர் ஆர்.என்.பாபா தெரிவித்துள்ளார்.

பிசிசிஐ மறுசீரமைப்பு விவகாரத்தில் லோதா குழு பரிந்துரையினால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிசிசிஐ அதிகாரிகள், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் ஸ்ரீனிவாசன் தலைமையில் பெங்களூரில் சனிக்கிழமை கலந்தாலோசித்தனர். இந்நிலையில், டிஎன்சிஏ இத்தகைய முடிவை அறிவித்துள்ளது.

முன்னதாக, இந்தியா- இங்கிலாந்து மோதும் முதல் ஆட்டம் பிப்ரவரி 13 முதல் 16 வரையிலும், மற்றொரு ஆட்டம் பிப்ரவரி 21 முதல் 24 வரையிலும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருந்தது.