விளையாட்டு

நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்புக்கோரிய பிசிசிஐ முன்னாள் தலைவர்

webteam

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிசிசிஐ முன்னாள் தலைவரான அனுராக் தாக்கூர் உச்சநீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரினார். 

பிசிசிஐ விவகாரங்கள் தொடர்பாக நீதிமன்றத்துக்கு தவறான தகவல் அளித்ததாக அனுராக் தாக்கூர் மீது கடந்த ஜனவரி 2ல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் அனுராக் தாக்கூர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், நீதிமன்றத்தின் மாண்பைக் கெடுப்பது தமது நோக்கமல்ல என்றும், நீதிமன்றத்துக்கு தவறான தகவல் அளித்தது தொடர்பாக நிபந்தனையற்ற மன்னிப்புக் கோருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக அனுராக் தாக்கூர் தரப்பில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், ஒருபக்க அளவில் மனுத்தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தியிருந்தது. மேலும், வழக்கு விசாரணை நடைபெறும் ஜூலை 14ல் நேரில் ஆஜராகுமாறும் அனுராக் தாக்கூருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.