விளையாட்டு

இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு 2 ஆயிரம் விண்ணப்பங்கள் !

webteam

இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு 2ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது. 

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ரவி சாஸ்திரி, பந்துவீச்சு பயிற்சி யாளராக பரத் அருண், பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோரின் பதவி காலம் உலகக் கோப்பை தொடருடன் முடிவடைந்தது. இதனையடுத்து இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் கடந்த 30ஆம் தேதியுடன் முடிந்தது.

இந்நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு 2 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது. இவற்றில் குறிப்பாக தலைமை பயிற்சியாளர் பதவிக்கு ஆஸ்திரேலியாவின் டாம் மூடி, நியூசிலாந்தின் மெக் ஹெசன், இந்தியாவின் லால்சந்த் ராஜ்புட் மற்றும் ராபின் சிங் ஆகியோர் விண்ணப்பித்துள்ளனர். 

அதேபோல இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் பதவிக்கு தென் ஆப்பிரிக்காவின் ஜாண்டி ரோட்ஸ் விண்ணப்பித்துள்ளார். பந்துவீச்சு பயிற்சியாளர் பதவிக்கு இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் விண்ணப்பித்துள்ளார். 

இந்தப் பதவிக்கு தகுதியான நபரை தேர்ந்தெடுக்க, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் கபில்தேவ், அன்ஷுமன் கெயிவாட் , சாந்தா ரங்கசாமி உள்ளிட்டவர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்கள், விண்ணப்பித்தவர்களிடம் ஆகஸ்ட் 13 அல்லது 14ஆம் தேதி நேர்காணல் நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.