விளையாட்டு

இப்படியா வீரர்களை மாற்றி மாற்றி தேர்வு செய்வீர்கள்? - பிசிசிஐ நிர்வாகி காட்டம்

webteam

உலகக் கோப்பைக்கான அணி தேர்வில் தேர்வுக் குழுவினர் சரியாக செயல்படவில்லை என்று பிசிசிஐ நிர்வாகி ஒருவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். 

நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியடைந்து வெளியேறியது. இந்தத் தொடருக்கான இந்திய அணி தேர்வில் சரியான நடைமுறை கடைபிடிக்கவில்லை என்று பிசிசிஐ நிர்வாகி ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ளார். 

அதில், “இந்திய அணி வெற்றி பெறும் போது மட்டும் தேர்வுக்குழுவினர் பாராட்டு பெறுகின்றனர். ஆனால் தோல்வியடையும் போது,  வீரர்களை மட்டும் குறை கூறுவது தவறு. இந்தத் தொடருக்கு வீரர்களை தேர்வு செய்த தேர்வுக் குழுவினரும் அணியின் தோல்விக்கு பொறுப்பு ஏற்கவேண்டும். அந்தவகையில் இந்த உலகக் கோப்பைக்கான அணியின் தேர்வு சரியாக இல்லை. 

ஏனென்றால் இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியில் நான்காவது இடத்தில் வீரர்களை மாறி மாறி களமிறக்கினர். இதற்கு சரியான அணி தேர்வு இல்லாததே காரணம். உதாரணமாக இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் காயம் அடைந்த போது தொடக்க ஆட்டகாரரை மாற்று வீரராக எடுக்காமல் நடுகள ஆட்டக்காரரான ரிஷப் பந்தை அணியில் எடுத்தனர். 

அதேபோல நடுகள ஆட்டக்காரரான விஜய் சங்கர் காயம் அடைந்த போது அவருக்கு மாற்று வீரராக ஒரு தொடக்க ஆட்டக்காரரான மாயங்க் அகர்வாலை தேர்வு செய்தனர். எனவே இவ்வாறு அணியின் வீரர்களை தேர்வு செய்யும் தேர்வுக்குழுவின் செயலை யார் ஆய்வு செய்வார்கள் என்ற எண்ணம் எழுந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.