விளையாட்டு

சிபிஎல் தொடர்: 2 வது முறையாகக் கோப்பையை வென்றது பார்படாஸ்!

webteam

கரிபீயன் பிரிமீயர் லீக் (சிபிஎல்) கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் வென்று ஜேசன் ஹோல்டர் தலைமையிலான பார்படாஸ் அணி, கோப்பையைக் கைப்பற்றியது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போல, சிபிஎல் கிரிக்கெட் லீக் தொடர், வெஸ்ட் இண்டீஸில் கடந்த 6 வருடமாக நடந்து வருகிறது. இதன் 7-வது தொடர் கடந்த ஒரு மாதமாக வெஸ்ட் இண்டீஸில் நடந்து வந்தது. 6 அணிகள் மோதிய இந்த தொடரின் இறுதிப் போட்டியில் ஜேசன் ஹோல்டர் தலைமையிலான பார்படாஸ் டிரைடன்ட்ஸ் அணியும் சோயிப் மாலிக் தலைமையிலான கயானா அமேசான் வாரியர்ஸ் அணியும் மோதின.

முதலில் ஆடிய பார்படாஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்தது. அதிகப்பட்சமாக ஜேசன் கார்டர், 27 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். பின்னர் ஆடிய கயானா அணியால் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 27 ரன்கள் வித்தியாசத்தில் பார்படாஸ் அணி வெற்றி பெற்று, 2 வது முறையாகக் கோப்பையைக் கைப்பற்றியது.

கயானா அணி, 5 முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறியும் தோல்வியையே சந்தித்து வருவது அந்த அணியினருக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.