விளையாட்டு

300 பிளஸ் ரன்களை இரண்டு முறை துரத்தி வெற்றிப் பெற்ற பங்களாதேஷ் !

webteam

உலகக் கோப்பை போட்டிகளில் பங்களாதேஷ் அணி 300 மற்றும் அதற்கும் மேற்பட்ட ஸ்கோர்களை இரண்டு முறை சேஸ் செய்து வென்றுள்ளது. மேலும் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் நான்கு முறை சேஸ் செய்து வெற்றி வாகை சூடியுள்ளது. மேலும் நடப்புத் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் 322 ரன்களை துரத்தி அபார வெற்றிப் பெற்றுள்ளது.

உலகக் கோப்பை தொடரின் 40வது லீக் போட்டி இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடையே நடைபெற்று வருகிறது. எட்ஜ்பாஸ்டான் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில், இந்திய டாஸ் வென்று முதல் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் ஷர்மா மற்றும் கே.எல்.ராகுல் விக்கெட்டை இழக்காமல் விளையாடினர். அதிரடியாக விளையாடிய ரோகித் ஷர்மா சதம் அடித்தார். பின்னர் 104 (92) ரன்களில் அவுட் ஆனார்.

அவரைத் தொடர்ந்து கே.எல்.ராகுல் 77 (92) ரன்களில் ஆட்டமிழக்க, கேப்டன் விராட் கோலி 26 (27) ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த ரிஷாப் பண்ட் 48 (41) ரன்களில் ஆட்டமிழந்தார். இதற்கிடையே வந்த ஹர்திக் பாண்ட்யா ரன் எதுவும் எடுக்காமல் 0 (2) விக்கெட்டை பறிகொடுத்தார். இறுதி ஓவர் வரை பவுண்டரிகளை அடிக்க நினைத்த தோனி 35 (33) ரன்களில் அவுட் ஆனார். 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு இந்திய அணி 314 ரன்கள் குவித்தது. பங்களாதேஷ் அணியில் முஸ்தஃபிஸுர் ரகுமான் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

315 ரன்கள் எளிதான இலக்கா அல்லது கடினமானதா என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும். இந்த உலகக் கோப்பை போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி கொடுத்த 322 இலக்கை எளிதாக கடந்து வெற்றிப் பெற்றது பங்களாதேஷ். இதற்கு முன்பு 2015 உலகக் கோப்பையில் ஸ்காட்லாந்து அணி நிர்ணயித்து 319 ரன்களையும் சேஸ் செய்து வெற்றிப் பெற்றது பங்களாதேஷ். எனவே இந்திய அணியின் பந்துவீச்சை பொறுத்துதான் பங்களாதேஷின் வெற்றியும் தோல்வியும் அமையும்.