அவனி லேகரா  Facebook
விளையாட்டு

அசராத மன உறுதி! அடுத்தடுத்த பாராலிம்பிக்ஸ்களில் இந்தியாவின் மூவர்ணக் கொடியை உயர பறக்கவிட்ட வீராங்கனை

PT WEB

சாலை விபத்தினால் நடக்க இயலாமல் போன பின்னரும், தனது அசராத மன உறுதியினால் அடுத்தடுத்த பாராலிம்பிக்ஸ்களில் இந்தியாவின் மூவர்ணக் கொடியை உயர பறக்க வைத்திருக்கிறார் ஒரு இளம் பெண்.பாராலிம்பிக்ஸில் இரட்டை தங்க பதக்கங்களை வென்ற ஒரே இந்திய பெண்ணான அவர் யார் என்பதை தற்போது காணலாம்.

மன உறுதிக்கான மறுபெயர் என்றால் அவனி லேகரா என தராளமாய் சொல்லி விடலாம். ஆச்சரியப்பட வைக்கும் சாதனைகளை நிகழ்த்த, அவர் கடந்த வந்த பாதை அத்தனை கடினமானது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சொந்த ஊராக கொண்டவர் அவனி லேகரா. சிறு வயது குழந்தைகளை போலவே ஓடி ஆடி உற்சாகமாக வலம் வந்தவரை, முடக்க முயன்றது ஒரு சாலை விபத்து. அவருக்கு 11 வயதானபோது ஏற்பட்ட விபத்தில், முதுகுத்தண்டில் அடிப்பட்டதன் காரணமாக, இடுப்புக்கு கீழே உள்ள பாகங்கள் செயலிழந்தன.

இதனால் சக்கர நாற்காலியில் பயணிக்க வேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டது. அவனி லேகரா முடங்கி விடக்கூடாது.. அவரை இந்த துயரத்திலிருந்து மீட்டெடுக்க வேண்டுமென நினைத்த அவரது தந்தை, அவனி லேகராவை துப்பாக்கிச்சுடுதலில் ஈடுபடுத்தினார்.

தனது அர்ப்பணிப்பு, விடா முயற்சியால் விரைவிலேயே தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் சாதிக்கத்தொடங்கிய அவனி லேகரா, டோக்கியோ பாராலிம்பிக்ஸில் தனது பெயரை பதித்தார். துப்பாக்கி சுடுதலில் தங்கம் மற்றும் வெண்கல பதக்கங்களை வென்ற அவர், ஒரே பாராலிம்பிக்ஸில் இரண்டு பதக்கங்களை வென்ற இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்தார்.

தற்போது நடைபெற்று வரும் பாராலிம்பிக்ஸ் போட்டியிலும், எளிதாக அவனி லேகராவிற்கு தங்கம் கிடைத்துவிடவில்லை. கடந்தாண்டிலிருந்து அவர் பித்தப்பை கற்களால் அவதிப்பட்டே வந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் இது அவரது பயிற்சியையே பாதித்துள்ளது. வயிற்றில் ஏற்பட்ட வலியால் வழக்கத்தை விட குறைவாக பயிற்சி மேற்கொண்டு வந்திருக்கிறார்.

இதனையடுத்து, 5 மாதங்களுக்கு முன்னர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, அவரது பித்தப்பையிலிருந்த கற்கள் அகற்றப்பட்டிருக்கின்றன. பின்னர் சிறிது காலம் ஓய்விலிருந்த அவர், தனது கடினமான பயிற்சியின் காரணமாக, நடப்பு பாராலிம்பிக்ஸில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் எஸ் ஹெச் 1 பிரிவில் தங்கம் வென்று சாதித்திருக்கிறார். தன்மூலம் பாராலிம்பிக்ஸில் இரண்டு முறை தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்று சாதனையும் அவருக்கு சொந்தமாகியிருக்கிறது. அவனி லேகரா கடந்து வந்த பாதை, அவரது தளராத உறுதி, தன்னம்பிக்கை ஆகியவை மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமின்றி, அனைவருக்கும் உத்வேகமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.