விளையாட்டு

தூங்கிய பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த கிரிக்கெட் வீரர்!

webteam

தூங்கிக்கொண்டிருந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டு உறுதியாகி யுள்ளது.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர், அலெக்ஸ் ஹெப்பர்ன் (Alex Hepburn ). 23 வயதான இவர், கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் என்பதற்காக கடந்த 2013 ஆம் ஆண்டு இங்கிலாந்து சென்றார். அங்கு வொர்சஸ்டர்ஷைர் கவுன்டி அணிக்காக கிரிக்கெட் விளையாடி வந்த இவர், சிட்டி சென்டர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். 

கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி இரவு நண்பர்களுடன் வெளியில் சென்று வந்த இவர், பக்கத்து வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணை, பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் கூறப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண் யார் என்பது வெளியிடப்படவில்லை.

இது தொடர்பான வழக்கு, மத்திய இங்கிலாந்தில் உள்ள வொர்சஸ்டர் கிரவுன் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிவில், அவர் பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானது. அவருக்கான தண்டனை வரும் 30 ஆம் தேதி அறிவிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.