விளையாட்டு

மலிங்கா மிரட்டல் வீண்: பங்களாதேஷ் பந்தாவான வெற்றி!

webteam

ஆசியக் கோப்பை தொடரில் இலங்கைக்கு எதிரான போட்டியில் முஸ்ஃபிகுர் ரஹ்மானின் அபார சதத்தால் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்றது.

14-வது ஆசியக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று தொடங்கியது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், ஹாங்காங் ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன. நேற்று தொடங்கிய முதல் போட்டியில் இலங்கை-பங்களாதேஷ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங் செய்தது. 

தொடக்கமே அந்த அணிக்கு அதிர்ச்சியாக அமைந்தது. ஒரு ரன் எடுப்பதற்குள்,  லிட்டன் தாஸ், ஷகிப் அல் ஹாசன் இருவரும் டக் அவுட் ஆனா ர்கள். இந்த இரண்டு விக்கெட்டையும் ஒரு வருடத்துக்குப் பின் அணிக்குத் திரும்பிய மலிங்கா வீழ்த்தினார். அதோடு, தமிம் இக்பால் ரிட்டையர் ஹர்ட் மூலம் வெளியேறினார். இதனால், கிட்டத்தட்ட மூன்று விக்கெட்டுகள் இழந்த நிலைக்கு பங்களாதேஷ் சென்றது. அப்போது, முஸ்ஃபிகுர் ரஹிமுடன், முகமது மிதுன் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.  

இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் பங்களாதேஷ் அணி சரிவில் இருந்து மீண்டது. இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு நூறு ரன்களுக்கு மேல் சேர்த்தது. அந்த அணி 134 ரன்கள் எடுத்திருந்த நிலையில், சிறப்பாக விளையாடி வந்த மிதுன் 63(68) ரன்னில் ஆட்டமிழந்தார். அவரது விக்கெட்டை தொடர்ந்து அந்த அணியின் சரிவு தொடங்கியது. அடுத்து வந்த யாரும் ரன்களை சேர்க்கவில்லை. விக்கெட் ஒருபுறம் வீழ்ந்தா லும், மறுபுறம் தனி ஆளாக முஸ்ஃபிகுர் ரஹிம் ரன்களை சேர்த்தார். அவர் 123 பந்தில் சதம் அடித்தார்.

இறுதியில், முஸ்ஃபிகுர் சிக்ஸர்களும், பவுண்டரிகளுமாக விளாசினார். குறிப்பாக அவர் சதம் அடித்த பின்னர் இலங்கை பந்துவீச்சாளர்களை ஒரு கை பார்த்தார். இதனால், ரன் ரேட் வேகமாக உயர்ந்தது. கடைசி விக்கெட்டாக முஸ்ஃபிகுர் வீழ்ந்தார். அவர் 150 பந்தில் 144 ரன்கள் அடித் தார்.

பங்களாதேஷ் அணி 49.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 261 ரன்கள் எடுத்தது. இலங்கை அணி தரப்பில் மலிங்கா 10 ஓவர்கள் வீசி 23 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். 

பின்னர் 262 ரன்கள் என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. பங்களாதேஷ் அணியின் துல்லியமான பந்துவீச்சு காரணமாக, 35.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த அந்த அணி 124 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. அந்த அணியில் அதிகப்பட்சமாக தில்ருவான் பெரேரா 29 ரன்களும் உபுல் தரங்கா 27 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர். 

பங்களாதேஷ் தரப்பில் மோர்டசா, முஸ்தாபிஷூர் ரஹ்மான், ஹசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ருபெல் ஹூசைன், மொசாட்டக் ஹூசைன், ஷகி அல் ஹசன் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.