விளையாட்டு

20 நாள் கட்டுப்பாடு முடிவுக்கு வந்தது ! குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் !

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அந்தப்
போட்டியில் இந்தியா 89 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இப்போது உலகக் கோப்பை புள்ளிகள் பட்டியலில் 7
புள்ளிகளுடன் இந்தியா நான்காவது இடத்தில் இருக்கிறது. இதனையடுத்து இந்தியா தனது அடுத்தப் போட்டியில்
ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி ஜூன் 22 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தப் போட்டி
சவுத்தாம்ப்டனில் நடக்கிறது. கடந்த போட்டிக்கும் அடுத்து ஆப்கான் அணியுடனான போட்டிக்கும் இடையே நீண்ட இடைவெளி
இருப்பதால் இந்திய அணி வீரர்கள் லண்டன் நகர வீதிகளில் தங்களது குடும்பத்தினருடன் நேரம் செலவழித்து வருகின்றனர்.

மேலும், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் மனைவியான அனுஷ்கா ஷர்மா லண்டன் சென்றுள்ளார். இவர்கள்
இருவரும் ஷாப்பிங் செய்யும் புகைப்படமும் வேகமாக பரவி வருகிறது. இதனிடையே இந்திய அணியின் தொடக்க
ஆட்டக்காரர்களான ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் இணைந்து தங்களது குடும்பத்தினருடன் இங்கிலாந்தின் நகரங்களை
சுற்றிப் பார்த்து வருகின்றனர். இதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஷிகர் தவான்.

உலகக் கோப்பை தொடரில் விளையாடி வரும் இந்திய வீரர்கள் தங்கள் குடும்பத்தினரை முதல் 20 நாட்களுக்கு அழைத்து வரக்
கூடாது என தெரிவித்திருந்தது. இப்போது 20 நாள்கள் முடிவடைந்ததையடுத்து இந்திய வீரர்களின் குடும்பத்தினர் பலர் லண்டன்
பறந்துள்ளனர். ஆனால், இப்போது வந்துள்ள அவர்கள் 15 நாட்கள் மட்டுமே வீரர்களுடன் இருக்க வேண்டும் என ஏற்கெனவே
தெரிவித்து சில கட்டுப்பாடுகளை விதித்திருந்தது பிசிசிஐ என்பது குறிப்பிடத்தக்கது.