விளையாட்டு

பொதுவெளியில் அவமானப்படுத்துவதா? விராத் கோலி, அனுஷ்காவுக்கு நோட்டீஸ்!

பொதுவெளியில் அவமானப்படுத்துவதா? விராத் கோலி, அனுஷ்காவுக்கு நோட்டீஸ்!

webteam

தன்னை பொதுவெளியில் அவமானப்படுத்தியதாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலிக்கும் அவர் மனைவி நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும் நடிகர் அர்ஹான் சிங் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.


விராத் கோலியும், அவர் மனைவி அனுஷ்கா ஷர்மாவும் கடந்த சில நாட்களுக்கு முன் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது சொகுசு கார் ஒன்றில் இருந்த ஒருவர் சாலையோரம் குப்பையை வீசினார். இதைக் கண்ட அனுஷ்கா ஷர்மா, தனது காரை நிறுத்தி அவரை கண்டித் தார். குப்பைகளை குப்பைத் தொட்டியில் போடுமாறும் அறிவுறுத்தினார்.

இது தொடர்பான வீடியோ காட்சிகளை விராத் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு அதில் தனது கருத்தையும் தெரிவித்தார். ’உயர்தர சொகுசு காரில் பயணம் செய்கிறார்கள். ஆனால் மூளையை மட்டும் பறிகொடுத்து விடுகிறார்கள். இந்த மக்கள் நமது நாட்டை சுத்தமாக வைத்துக் கொள்வார்களா? இது போன்றவர்களை கண்டால் விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்’ என பதிவிட்டிருந்தார். 

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இந்நிலையில் அனுஷ்கா ஷர்மா கண்டித்த நபர் அர்ஹன் சிங் எனவும் அவர் பகுதி நேர நடிகர் என்பதும் தெரியவந்தது. இதுதொடர்பாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில், ’வாகனம் ஓட்டும்போது கவனக்குறைவால் பிளாஸ்டிக் குப்பையை வீசிவிட்டேன். அப்போது அனுஷ்கா ஷர்மா என்னை கண்டித்தார். என் தவறுக்கு மன்னிப்பு கேட்டுவிட்டேன். ஆனாலும் அனுஷ்கா  பொறுமையாகக் கூறியிருக்கலாம். இதனால் அவர் ஒன்றும் குறைந்திருக்க மாட்டார்’ என்று கூறியிருந்தார். 

இந்நிலையில் அர்ஹன் சிங், அனுஷ்காவுக்கும் விராத் கோலிக்கும் வக்கீல் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த வீடியோவை வெளியிட்டு தன்னை அவமானப்படுத்திவிட்டதாகவும் அதற்கு விளக்கம் கேட்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.