விளையாட்டு

"எனக்கு வயதாகவில்லை"-ஓய்வு குறித்த கேள்விக்கு ஹர்பஜன் சிங் பதில் !

jagadeesh

எனக்கு வயதாகவில்லை. இந்த ஐபிஎல் போட்டியுடன் ஓய்வுப் பெறும் முடிவை இன்னும் நான் எடுக்கவில்லை என்று இந்திய அணியின் சுழற் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த ஹர்பஜன் சிங் ஓய்வு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்தார், அதில் " நீங்கள் எனது திறமையை பரிசோதிக்க விரும்பினால், சிறந்தவராக கருதும் இளம் வீரரை என் முன் நிறுத்துங்கள். அவரது திறமையுடன் நான் போட்டியிட தயார். பீல்டிங் செய்யும்போது பந்தை கால்களுக்கு இடையில் தவற விட்டாலோ? அல்லது குனிந்து பந்தை பிடிக்க முடியாமல் தடுமாறினாலோ? வயது குறித்து பேசலாம்" என்றார்.

மேலும் தொடர்ந்த அவர் " ஆனால் நான் இந்திய அணியின் சீருடையை அணிந்து சுமார் 800 நாட்களுக்கு மேல் களத்தில் நின்று விளையாடி இருக்கிறேன். நான் சாதனையாளன். எனக்கு யாருடைய அனுதாபமும் தேவையில்லை. எனக்கு அதிக வயதாகி விட்டது என்று உணர வைக்க முயற்சிக்கிறீர்கள். அசாருதீன் கேப்டனாக இருக்கையில் நான் இந்திய அணியில் விளையாட தொடங்கினேன். 20 ஆண்டுகள் நல்லதொரு பயணத்தை மேற்கொள்ள அனுமதித்த கடவுளுக்கு நன்றி கடன்பட்டிருக்கிறேன்" என தெரிவித்துள்ளார் ஹர்பஜன்.

ஐபிஎல் குறித்துப் பேசிய ஹர்பஜன் " இது தான் எனக்கு கடைசி ஐ.பி.எல். போட்டியாக இருக்கும் என்று சொல்லமாட்டேன். எனது உடல் நிலையை பொறுத்து தான் முடிவெடுப்பேன். கடந்த 4 மாதங்களாக பயிற்சி, ஓய்வு, யோகா ஆகியவற்றின் மூலம் 2013-ம் ஆண்டில் இருந்தது போன்ற புத்துணர்ச்சியை பெற்று இருக்கிறேன். அந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் நான் 24 விக்கெட்டுகள் வீழ்த்தினேன் என்றார்.