விளையாட்டு

இஷாந்த் சர்மா கலக்கல்! - 300 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை

jagadeesh

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா இங்கிலாந்துக்கு எதிராக சென்னையில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் தன்னுடைய 300-ஆவது விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்.

சென்னையில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து தன்னுடைய முதல் இன்னிங்ஸில் 578 ரன்கள் எடுத்தது. இதனைத்தொடர்ந்து விளையாடிய இந்தியா ரிஷப் பன்ட், புஜாரா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோரது அரை சதத்தால் 337 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இப்போது 241 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து அணி தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது.

தொடக்க ஆட்டக்காரர்களாக பர்ன்ஸ் மற்றும் டோம் சிப்லே களமிறங்கினர். இந்தியத் தரப்பில் அஸ்வின் முதல் ஓவரை வீசினார். இதில் முதல் பந்தை எதிர்கொண்ட் பர்ன்ஸ் ஸ்லிப்பில் பீல்டிங் செய்திருந்த ரஹானேவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். பின்பு மற்றொரு தொடக்க வீரரான டோம் சிப்லேவையும் அவுட் செய்தார் அஸ்வின்.

இதனையடுத்து ஜோ ரூட்டும் , லாரண்ஸும் ஜோடி சேர்ந்தனர். இந்தக் கூட்டணி விரைவாக ரன்களை சேர்க்க முயற்சித்தபோது வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மாவை பந்துவீச அழைத்தார் கேப்டன் விராட் கோலி. இதில் இஷாந்த் சர்மா பந்துவீச்சில் லாரண்ஸ் அவுட்டானார். இதனையடுத்து சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தனது 300 ஆவது விக்கெட்டை எடுத்தார் இஷாந்த் சர்மா. இந்திய வேகப்பந்து வீச்சாளர்களில் கபில் தேவ், ஜாகீர் கானுக்கு அடுத்து டெஸ்ட் போட்டியில் 300 ஆவது விக்கெடை எடுத்த 3 ஆவது வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றார் இஷாந்த் சர்மா.