விளையாட்டு

உலகக் கோப்பை அணிக்கு தேர்வு செய்யப்படாதது வருத்தம்தான்: ஸ்ரேயாஸ் ஐயர்!

webteam

உலகக் கோப்பைக்கான அணியில் தேர்வு செய்யப்படாதது வருத்தமாக இருந்தது என்று இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்தார்.

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர். சமீபத்தில், வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடிய இவர், இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் செல்லும் இந்திய அணியில் ஒரு நாள் மற்றும் டி20 தொடருக்கு அவர் தேர்வாகி இருக்கிறார்.

அவர் அணிக்குள் மீண்டும் இடம் பிடித்திருப்பது பற்றி கூறும்போது, ’’உண்மையிலேயே திறமை சாலியாக இருந்தால், உங்களை நிரூபிக்க வாய்ப்புகள் தேவை. நீங்கள் தொடர்ந்து திறமையை நிரூபித்துக் கொண்டிருந்தால் கண்டிப்பாக வாய்ப்புகள் தேடி வரும். எனக்கு சில போட்டிகளில் அணியில் இடம் பிடித்தும் ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் பொறுமை இழக்க வேண்டி வரும் என்பது உண்மைதான். ஆனால், அணி தேர்வு நம் கையில் இல்லையே.


அடிக்கடி அணிக்குள் வருவதும் போவதுமாக இருந்தால் அது நம்பிக்கையை சிதறடித்துவிடும். நான் எதையும் பாசிட்டிவாக அணுகும் எண்ணம் கொண்டவன். அதனால் இதை நினைத்துக் குழம்ப மாட்டேன். உலகக் கோப்பையில் விளையாட வேண்டும் என்பது எனது கனவு. கடந்த உலகக் கோப்பைக்கான அணியில் தேர்வு செய்யப்படாதது வருத்தமாகத்தான் இருந்தது. அடுத்த உலகக் கோப்பையில் அந்த வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன்.

தினமும் பேட்டிங் பயிற்சி செய்கிறேன். முடிந்தவரை சிறப்பான ஷாட்களை ஆடவேண்டும் என நினைப்பேன். இந்த பயிற்சி சர்வதேச அரங்கில் சிறப்பாக செயல்பட உதவும். இந்தியா ஏ அணியில் விளையாடியது, என்னை நிரூபிக்க கிடைத்த வாய்ப்பு. வெஸ்ட் இண்டீஸ் மைதானங்கள் மற்றும் பிட்ச் கண்டிஷன்கள் எனக்கு நன்றாகத் தெரியும். அங்கு விளையாடுவது சவாலானதுதான். வாய்ப்பு கிடைத்தால் அங்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன்’’ என்றார்.