விளையாட்டு

எனக்கு எதிராக சதி செய்கிறார்கள்: ’ஆப்கான் தோனி’ பரபரப்பு புகார்

எனக்கு எதிராக சதி செய்கிறார்கள்: ’ஆப்கான் தோனி’ பரபரப்பு புகார்

webteam

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் உள்ள சிலர் எனக்கு எதிரான சதியில் ஈடுபட்டுள்ளனர் என்று அந்த அணியின் அதிரடி வீரர் முகமது ஷசாத் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முகமது ஷசாத். தொடக்க ஆட்டக்காரரான இவர், தோனி போல ஆடுவதால், ஆப்கானிஸ்தான் தோனி என்று அழைக்கப்படுகிறார். உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான ஆப்கானிஸ்தான் அணியில் இடம் பிடித்திருந்த அவர்  ஆஸ்திரேலியா மற்றும் இலங்கைக்கு எதிரான போட்டிகளில் ஆடினார். நியூசிலாந்துக்கு எதிராக கடந்த 8 ஆம் தேதி நடந்த போட்டிக்கு முன், அணியில் இருந்து நீக்கப்பட்டார். இடது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் உலகக் கோப்பை தொடரில் நீக்கப்பட்டதாக ஆப்கான் கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்தது.

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மீது ஷசாத் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, ‘’நான் உடல் தகுதியுடன் தான் இருக்கிறேன். இருந்தும் உடல் தகுதி இல்லை என்று நீக்கியுள்ளனர். இது எனக்கு புரியவில்லை. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் உள்ள சிலர் எனக்கு எதிரான சதியில் ஈடுபட்டுள்ளனர். அணியின் மானேஜர், டாக்டர், கேப்டன் ஆகியோருக்கு மட்டுமே எனக்கு பதிலாக, இன்னொருவர் பெயர் அறிவிக்கப்படுவது தெரியும். பயிற்சியாளர் பில் சிம்மன்ஸுக்கு கூட பிறகு தான் தெரியும். என் இதயம் உடைந்துவிட்டது. 

நியூசிலாந்துக்கு எதிரான போட்டிக்காக, பயிற்சியில் ஈடுபட்ட பின் வீரர்களுடன் சாப்பிட்டேன். ஓட்டலுக்கு திரும்புவதற்காக பேருந்தில் சக வீரர்களுடன் உட்கார்ந்திருக்கும்போது எனது ஃபோனுக்கு ஐசிசி மெசேஜ் ஒன்றை அனுப்பி இருந்தது. அதில் காயம் காரணமாக உலகக் கோப்பைத் தொடரில் இருந்து நான் நீக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். 

இதுபற்றி மானேஜரிடம் கேட்டேன். அவர் போனை பையில் போட்டுவிட்டு, மருத்துவரிடம் பேசச் சொன்னார். அவரிடம் கேட்டால், என்னால் எதுவும் செய்ய முடியாது என்றார். என்ன பிரச்னை என்று தெரியவில்லை. அவர்களுக்கு என்னால் ஏதும் பிரச்னை என்றால், அதை எனக்குத் தெரியபடுத்த வேண்டும். நான் விளையாட வேண்டாம் என்று விரும்பினால், கிரிக்கெட்டில் இருந்தே விலகி விடுகிறேன். உலகக் கோப்பையில் விளையாடுவது எனது கனவு. 2015 ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் போதும் என்னை நீக்கினார்கள். (அப்போது உடல் தகுதி காரணமாக தேர்வு செய்யப்படவில்லை). இப்போதும் நீக்கியுள்ளனர்’’ என்றார். 


இதுபற்றி ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரி அசத்துல்லா கான் கூறும்போது, ‘முகமது ஷாசத் சொல்வது தவறானது. அவரது மருத்துவ அறிக்கை ஐ.சி.சி.யிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் அவரது உடல் தகுதி பற்றி இடம்பெற்றிருக்கிறது. அவர் எங்கள் அணியின் முக்கியமான வீரர். அவரை நீக்கியது கடினமான முடிவுதான். இருந்தாலும் உடல் தகுதி விஷயத்தில் சமரசத்துக்கு இடமில்லை’ என்றார்.