விளையாட்டு

"என்னுடைய 400 ரன்னும்; ஐசிசி கோப்பைகளும்" என்ன சொல்கிறார் பிரையன் லாரா ?

jagadeesh

டெஸ்ட் போட்டியில் தான் அடித்த 400 ரன் சாதனையை முறியடிக்கும் வீரர்கள் இவர்கள்தான் என்றும், அதேபோல ஐசிசி கோப்பைகள் வெல்லும் அணி இதுதான் என்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் பிரையன் லாரா ஆருடம் தெரிவித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல் டைம் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் பிரையன் லாரா. கிரிக்கெட் உலகில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர். 1990-களில், உலகில் யார் தலைசிறந்த பேட்ஸ்மேன் என்ற போட்டி சச்சின் டெண்டுல்கருக்கும், பிரையன் லாராவுக்கும் இருந்தது. ஆனால் இருவருமே கிரிக்கெட் உலகில் முடிசூடா மன்னனாக திகழ்ந்தார்கள். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் 375 ரன்கள் விளாசி அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றிருந்தார் லாரா. இதனையடுத்து ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ ஹெய்டன் 380 ரன்கள் அடித்து அந்த சாதனையை முறியடித்தார். ஆனால் ஹெய்டன் சாதனையை குறுகிய காலத்திற்குள் லாரா 400 ரன்கள் அடித்து மீண்டும் முறியடித்தார்.

இப்போது வரை லாராவின் சாதனையை எந்தவொரு வீரராலும் முறியடிக்க முடியாமல்தான் இருக்கிறது. இது குறித்து தனியார் நிகழ்ச்சியில் பேசிய பிரையன் லாரா " டெஸ்ட் போட்டிகளில் 4-வது இடத்தில் களம் இறங்கி விளையாடி வரும் ஸ்டீவ் ஸ்மித்தால் என்னுடைய சாதனையை முறியடிப்பது மிகவும் கடினமானது. அவர் சிறந்த வீரர்தான், ஆனால் பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தி அவரால் விளையாட முடியாது. டேவிட் வார்னர் போன்ற வீரர்களால் உறுதியாக முடியும். விராட் கோலி முன்னதாகவே களம் இறங்கினால் அவர் 400 ரன்னை எட்டி விடுவார். ரோகித் சர்மாவுக்கும் என் சாதனையை முறியடிக்க வாய்ப்பு இருக்கிறது" என்றார்.

ஐசிசி கோப்பைகளை வெல்லும் வாய்ப்புள்ள அணிகள் குறித்து பேசிய லாரா " கோலி தலைமையில் ஆடும் அனைத்து ஐசிசி போட்டிகளையும் வெல்லும் திறன் படைத்தது இந்திய அணி. ஒவ்வொரு எதிரணியின் இலக்காக இந்தியா உள்ளது. எந்த போட்டியிலும் ஒரு கட்டத்தில் காலிறுதி, அரையிறுதி, இறுதி போன்ற முக்கியமான ஆட்டத்தில் இந்தியாவை எதிர்கொண்டு ஒவ்வொரு அணியும் ஆட வேண்டியுள்ளது. இறுதியாக கடந்த 2013-இல் இந்தியா ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பையை வென்றது. அதன் பின்னா் வெல்லவில்லை. ஆனால் தற்போதைய அணி சிறப்பாக கட்டமைக்கப்பட்டுள்ளது " என்றார் அவர்.