ரோகித்-பாபர் அசாம் File image
Cricket

ஒருநாள் உலகக் கோப்பை: நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி?

சங்கீதா

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில், நியூசிலாந்தை வீழ்த்தி இங்கிலாந்து அணி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. இதனைத் தொடர்ந்து 2023-ம் ஆண்டு 13-வது ஒருநாள் உலகக் கோப்பை ஆடவர் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது. வரும் அக்டோபர் மாதம் 5-ம் தேதி முதல் நவம்பர் மாதம் 19-ம் தேதி வரை உலகக் கோப்பை தொடர் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.

ICC 2023 World Cup logo

இந்தத் தொடருக்கு ஏற்கனவே, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் ஆகிய 7 அணிகள் தகுதிப்பெற்றிருந்தன. இந்நிலையில், தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி, 8-வது அணியாக நேரடியாக தகுதிப் பெற்றுள்ளது. நேற்று நடைபெற்ற வங்கதேசம் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கான முதல் ஒருநாள் போட்டி மழைக் காரணமாக பாதியில் கைவிடப்பட்ட நிலையில், அயர்லாந்து அணி ஐசிசியின் உலகக் கோப்பை தொடருக்கு நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை இழந்துள்ளது. இதையடுத்து தென்னாப்பிரிக்கா அணி நேரடியாக தகுதி பெற்றுள்ளது.

மேலும், மீதமுள்ள 2 இடங்களுக்கு (மொத்தம் 10 அணிகள்) வரும் ஜூன் மற்றும் ஜூலை மாதம் ஜிம்பாப்வேவில் குவாலிஃபயர் போட்டிகள் நடைபெறவுள்ளது. இந்த குவாலிஃபயர் போட்டியில், ஜிம்பாப்வே, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, ஓமன், நேபாளம். இலங்கை, அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரக நாடுகள், மேற்கிந்திய தீவுகள் மற்றும் அயர்லாந்து அணிகள் மோதவுள்ளன. இதில் வெற்றிபெறும் 2 அணிகள் ஐசிசியின் 2023 ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கு தேர்வு செய்யப்படும்.

இந்நிலையில், ஐசிசியின் 2023 ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் அக்டோபர் 15-ம் தேதி நடைபெறவுள்ளதாக Cricbuzz இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான்- இந்திய அணிகள் மோதுகின்றன என்றாலே, ரசிகர்கள் கூட்டத்தால் மைதானங்கள் நிரம்பி வழியும். அதிலும், பல வருடங்களுக்குப் பிறகு பாகிஸ்தான்-இந்திய அணிகள், இந்தியாவில் மோதவுள்ளதால், அதிகளவிலான கூட்டம் கூடும் என்பதால், மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோடி மைதானத்தை தேர்வுசெய்துள்ளதாக தகவல் பரவி வருகிறது. மேலும் தனது முதல் போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி எதிர்கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது.

உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டி, அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில், இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத உள்ளதாகவும், இறுதிப்போட்டியும் அதே மைதானத்தில் நடைபெற இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அரையிறுதிப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது. அகமதாபாத், சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், டெல்லி, தர்மசாலா, இந்தூர், கொல்கத்தா, குவாஹத்தி, ராஜ்கோட், ராய்ப்பூர் மற்றும் மும்பை ஆகிய இடங்களில் உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளதாக சொல்லப்படுகிறது.

எனினும், தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் இந்த மாதத்துடன் நிறைவடைய உள்ள நிலையில், பிசிசிஐ மற்றும் ஐசிசி கலந்தாலோசித்து போட்டி நடைபெறும் அட்டவணையை விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகக் கோப்பை தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்குபெறவுள்ளன. இதில் லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும், மற்ற 9 அணிகளுடன் மோதவுள்ளன. முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதிபெறும். இதில் வெற்றிபெறும் இரண்டு அணிகள் இறுதிப் போட்டியில் மோதவுள்ளது. லீக் சுற்றுகள், நாக் அவுட், அரையிறுதி, இறுதிப் போட்டி உள்பட மொத்தம் 48 போட்டிகள் நடைபெறவுள்ளது.