பவன் கல்யாண் - ரோஜா - சந்திரபாபு நாயுடு புதிய தலைமுறை
இந்தியா

திருப்பதி லட்டு விவகாரம்: “கடவுளோடு விளையாடுகிறார் சந்திரபாபு நாயுடு”– ஆந்திர முன்னாள் அமைச்சர் ரோஜா

“திருப்பதி லட்டு விவகாரத்தில் கடவுளுடன் விளையாடி வருகிறார் சந்திரபாபு நாயுடு. சந்நிரபாபு நாயுடுவுக்கு கடவுள் நல்ல புத்தியைக் கொடுக்க வேண்டும்” என்று ஆந்திர முன்னாள் அமைச்சர் நடிகை ரோஜா தெரிவித்தார்.

PT WEB

செய்தியாளர்: மணிகண்டபிரபு

ஆந்திர மாநில முன்னாள் அமைச்சரும், நடிகையுமான ரோஜா மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நேற்று சாமி தரிசனம் செய்தார். முன்னதாக கோவிலுக்கு வந்த ரோஜா செய்தியாளர்களை சந்தித்தார்.

tirupati laddu issue

அப்போது பேசிய அவர்....

“உண்மையில் மிகவும் கஷ்டமாக இருக்கு, திருப்பதி லட்டு விவகாரத்தில் சந்திரபாபு நாயுடு கடவுளோடு விளையாடி வருகிறார். சந்திரபாபு நாயுடு தனது சுய நலத்துக்காக எதையும் செய்வார். எப்படியாவது ஆட்சிக்கு வர வேண்டும் என பொய் சொல்லி லட்டில் கலப்படம் என பேசி வருகிறார். ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் ஆந்திர மக்களுக்கு எதையும் சந்திரபாபு நாயுடு செய்யவில்லை.

ஆட்சிக்கு வந்து குழந்தைகளுக்கு பாலும், பொதுமக்களுக்கும் தண்ணீரும் கூட கொடுக்க முடியாத ஆட்சியை சந்திரபாபு நாயுடு நடத்தி வருகிறார். நிறைய தவறுகள் செய்யும் சந்திரபாபு நாயுடு அந்த தவறுகளை எல்லாம் திசை திருப்பும் நோக்கத்தில் இந்த லட்டு விவகாரத்தை பேசி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார். கடவுள் மீது உண்மையான பக்தி இருக்கும் முதல்வர் என்றால், இந்த விவகாரத்தில் நேர்மையான விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களை தண்டித்திருக்க வேண்டும்.

Chandrababu Naidu

“சந்திரபாபு நாயுடுக்கு எப்போதுமே கடவுள் மீது பக்தி இல்லை”

ஜெகன்மோகன் ஆட்சிக் காலத்தில் எந்த தவறும் நடக்கவில்லை. ஜெகன்மோகன் ரெட்டியை அரசியல் ரீதியாக பூஜ்ஜியம் ஆக்க வேண்டும் என்பதற்காக சந்திரபாபு நாயுடு இப்படி பேசி வருகிறார். இந்த விவகாரத்தில் சந்திரபாபு நாயுடுதான் தவறு செய்துள்ளார். அது அவருக்கு பின் விளைவுகளை ஏற்படுத்தி உள்ளது. சந்திரபாபு நாயுடுக்கு எப்போதுமே கடவுள் மீது பக்தியும் இல்லை, பயமும் இல்லை. எந்த கடவுள் காரியமாக இருந்தாலும் காலில் காலணி அணிந்து கொண்டுதான் பூஜைகளை சந்திரபாபு நாயுடு செய்வார்.

சந்திரபாபு நாயுடு செய்யும் தவறுகளுக்கு கடவுள் தண்டனை கொடுப்பார்:

திருப்பதியில் ஒரு கட்டடத்தை இடித்ததால் வெடிகுண்டு வெடித்தது. இதுபோல சந்திரபாபு நாயுடு செய்யும் தவறுகளுக்கு கடவுள் தண்டனை கொடுப்பார். உலகம் முழுவதும் உள்ள திருப்பதி பக்தர்களை லட்டு பிரசாதம் வாங்குவதில் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறார் சந்திரபாபு நாயுடு. சந்திரபாபு நாயுடுவும் பவன் கல்யாணும் தொடர்ந்து பல்வேறு பொய்களை கூறி வருகின்றனர். 2014 முதல் 2024 வரை கொடுக்கப்பட்ட டென்டர்கள் நிராகரிக்கப்பட்ட நெய் டேங்கர்கள் குறித்த அனைத்து விவரங்களும் உள்ளன. லட்டு விவகாரத்தில் நாடகம் ஏன் நடத்துகிறார் என தெரியவில்லை.

Actress Roja

“சந்திரபாபு நாயுடு மதத்தின் பெயரால் கேவலமான அரசியலை செய்து வருகிறார்”

மத்தியில் கூட்டணியிலும் மாநிலத்தில் அதிகாரத்திலும் உள்ள சந்திரபாபு நாயுடு விசாரணை நடத்தினால் அதை சந்திக்க தயாராக உள்ளோம். மோடியுடன் நெருக்கமாக உள்ள இவர்கள் உரிய விசாரணை நடத்த வேண்டாம் என நாங்கள் கூறவில்லை. ஆந்திராவை நாசம் செய்து வருகிறார் சந்திரபாபு நாயுடு. மதத்தின் பெயரால் கேவலமான அரசியலை சந்திரபாபு நாயுடு செய்து வருகிறார். திருப்பதி லட்டுவில் எந்தவிதமான கலப்படமும் இல்லை. சனாதன தர்மத்தை பின்பற்றுவதாகக் கூறும் இவர்கள் கடவுளை மதிப்பதில்லை, கடவுளை வணங்குவதில்லை, கடவுளை போற்றுவதில்லை.

“தவறு செய்திருந்தால் எங்கள் மீது நடவடிக்கை எடுங்கள்”

தன்னுடைய தவறுகளை எல்லாம் மறைப்பதற்காக இப்படி பொய் சொல்லி மிகப்பெரிய பாவத்தை சந்திரபாபு நாயுடு செய்துள்ளார். லட்டு விவகாரத்தை ஆந்திரா மக்களும் தெலுங்கானா மக்களும் நம்பப் போவதில்லை. சுற்றியுள்ள மாநில மக்கள்தான் குழம்பி இருக்கிறார்கள். நாங்கள் எதற்கும் பயப்படவில்லை. தவறு செய்திருந்தால் எங்கள் மீது நடவடிக்கை எடுங்கள். சிபிஐ விசாரணை கூட வையுங்கள். பொய் சொல்லி இருந்தால் பொய் சொல்லுபவர்களை தண்டிக்க வேண்டும்.

திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பா?

“கடவுள், சந்திரபாபு நாயுடுக்கு நல்ல புத்தி கொடுக்க வேண்டும்”

எல்லா கோவில்களிலும் உள்ள கடவுள்களை நாங்கள் வேண்டிக் கொள்கிறோம். சந்திரபாபு நாயுடுக்கு நல்ல புத்தியை கடவுள் கொடுக்க வேண்டும். அவர் முடிந்தால் வேலை செய்யட்டும், இல்லை என்றால் ராஜினாமா செய்துவிட்டு வீட்டில் இருக்கட்டும். அரசியலுக்காக சுயநலத்திற்காக கடவுளின் பெயரை பயன்படுத்தினால் அந்த கடவுள் அவர்களை சும்மா விடமாட்டார். உரிய தண்டனை கொடுப்பார். மத்தியில் கூட்டணியில் உள்ள சந்திரபாபு நாயுடு அரசியலுக்காக இது போன்ற பேசும் நிலையில் பாஜகவின் சிறு சிறு அமைச்சர்கள் கூட அவருடைய கருத்தை சொல்லி பேசி வருகின்றனர். இது பிரதமர் மோடிக்கு தெரியுமா தெரியாதா என தெரியவில்லை.

லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், உச்சநீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும். சனாதனத்தின்படி பேசும் பவன் கல்யாண், ஆனால், அவர் வீட்டில் சனாதனத்தை கடைபிடிப்பதில்லை, சினிமாவில் வசனம் எழுதிக்கொடுத்து பேசுவதை போல துணை முதல்வர் பவன் கல்யாண் சந்திரபாபு நாயுடு எழுதி கொடுத்ததை பேசி வருகிறார்” என்று காட்டமாக தெரிவித்தார்.