பாம்பு கடியால் இறந்தவர் PT
இந்தியா

பாம்பு கடிக்கு கங்கை நீரில் மிதக்கவிட்ட அவலம்.. மூடநம்பிகையால் பறிபோன இளைஞரின் உயிர்!

PT WEB

மூடநம்பிகையால் பறிபோன இளைஞரின் உயிர்...

உத்தர பிரதேசத்தின் புலன்சாகர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஜஹாங்கிராபாத் பகுதியில் வசித்து வந்த 20 வயது இளைஞரான மோகித் என்பவர் அப்பகுதியிலுள்ள கல்லூரியில் பிகாம் இறுதி ஆண்டு படித்து வந்துள்ளார்.

இந்நிலையில், மக்களவைத்தேர்தலில் தனது வாக்கினை செலுத்துவதற்காக கடந்த 26ம் தேதி மோகித் தனது சொந்த கிராமத்திற்கு சென்றுள்ளார். தேர்தலில் வாக்கை செலுத்திவிட்டு மீண்டும் வீடு திரும்பிக்கொண்டிருந்த மோகித் அப்பகுதியில் வயல்வரப்பில் நடந்து சென்ற போது, அவரை விஷநாகம் தீண்டியுள்ளது.

உடனடியாக உறவினர்கள் சிலர் மோகித்தை அருகில் இருந்த மருத்துவரிடம் அழைத்துச்சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இவருக்கான சிகிச்சை இங்கில்லை உடனடியாக வேறு மருத்துவமனை அழைத்துச்செல்லுமாறு கூறியுள்ளனர்.

ஆனால் வேறு சிலர் மருத்துவமனைக்கு கூட்டிச்செல்வதற்கு பதில், கங்கை நீரில் மோகித்தை நனைத்தால் அவர் உடலிலிருந்து விஷ முறிவு ஏற்படும் என்று கூறியதை அடுத்து, மூட நம்பிக்கையுடன், மோஹித்தை ஒரு கயிற்றில் கட்டி இரண்டு நாட்களாக கங்கை நீரில் மிதக்கவிட்டு இருக்கின்றனர்.

ஆனால், உறவினர்களின் இந்த மூடநம்பிக்கை எதுவும் இந்த இளைஞரை காப்பாற்றவில்லை மாறாக பாம்பு விஷம் உடலில் முழுவதுமாக ஏறி பரிதாபமாக அந்த இளைஞர் உயிரிழந்துள்ளார். இந்த வீடியோவானது தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.