இந்தியா

பாரா ஒலிம்பிக்கில் சாதிக்க துடிக்கும் இளைஞர்.. திறமை இருந்தும் பணம் இல்லாமல் தவிப்பு

webteam

திருவள்ளூரை சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர் ஒரு‌‌வர், பல தடைகளை தாண்டி ‌பாரா ஒலிம்பிக் தகுதிச்சுற்றில் விளையாட உள்ளார்.

திருவள்ளூரை அடுத்த சோழிப்பாளையம் பகுதியை சேர்ந்த மனோகரன் பிறவியிலேயே பார்வை திறன் குறைபாடு கொண்டவர். பத்தாம் வகுப்பு படித்த இவர், மூட்டை தூக்கும் தொழில் செய்து வந்துள்ளார். தான் மூட்டை தொழில் செய்து வந்தாலும், ஏதேனும் ஒரு துறையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் மனோகரனுக்கு ஆரம்பம் முதலே இருந்து வந்தது. இதற்காக ஜூடோ விளையாட்டில் பயிற்சி எடுத்துள்ளார். இதனைத்தொடர்ந்து பல போட்டிகளில் பங்கேற்று தற்போது பிரிட்டனில் நடக்கவுள்ள பாரா ஒலிம்பிக் தகுதிச்சுற்றுப் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

இது குறித்து மனோகரன்‌ கூறும்போது “ ஜூடோ போட்டியில், மாற்றுத்திறனாளிகளு‌க்கான உலக தரவரிசையில் 31-ஆவது இடத்தை பெற்றுள்ள எனக்கு
ஜப்பானில் நடைபெறவுள்ள பாரா ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெறுவதே லட்சியம். ஆனால் அதில் நான் பங்கேற்பதற்கு முன்னால், பிரிட்டனில் நடைபெறும் தகுதிச்சுற்று போட்டியில் பங்கேற்க வேண்டும். இதற்காக நான் பிரிட்டன் செல்ல வேண்டும்.

ஆனால் அங்கு செல்வதற்கு என்னிடம் போதிய பண வசதி இல்லை. அரசு உதவி செய்தால் நிச்சயமாக இந்தியாவிற்கு தங்கப் பதக்கத்தை பெற்றுத் தருவேன்” என்று கூறியுள்ளார். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் மனோகரன், போட்டிக்கு தயாராவதோடு சேர்த்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஜூடோ விளையாட்டை இலவசமாக கற்றுக்கொடுத்து வருகிறார்.