UP CM Yogi pt desk
இந்தியா

‘காதலியின் தந்தையை பழிவாங்க...’ யோகி ஆதித்யநாத்துக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர்! பகீர் பின்னணி

Justindurai S

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாரதிய ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. அங்கு அவசரகால எண்ணான 112 என்ற எண்ணில் அழைத்து, முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கே நேற்று ஒருவர் கொலை மிரட்டல் விடுத்திருந்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில் தொடர்பு எண்ணை ஆராய்ந்தபோது மிரட்டல் விடுத்தவர் பேகம்பூர்வா பகுதியை சேர்ந்த அமீன் (19) என்பது தெரியவந்தது.

அவரிடம் மிரட்டல் விடுத்தமைக்கான காரணம் குறித்து காவல்துறை விசாரித்தபோது, அவர் கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி அமீன் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார்; ஆனால் அப்பெண்ணின் தந்தை வேறொருவருக்கு தனது மகளை திருமணம் செய்து வைக்க முடிவு செய்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த அமீன், காதலியின் தந்தையை போலீஸில் சிக்க வைக்க சதித்திட்டம் தீட்டியிருக்கிறார்.

அதற்காக திட்டம்தீட்டி காதலியின் தந்தையுடைய செல்போனை திருடிய அமீன், அதில் தனது சிம் கார்டைப் பயன்படுத்தி அரசின் அவசரகால நம்பரான 112 என்ற எண்ணில் முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில் காதலியின் தந்தை மீதான காழ்ப்புணர்ச்சியால் முதல்வருக்கு தான் கொலை மிரட்டல் விடுத்ததை அமீன் ஒப்புக்கொண்டிருக்கிறார்.

இதுகுறித்து பாபுபூர்வா காவல் உதவி ஆணையர் சந்தோஷ் குமார் சிங் கூறுகையில், ''சுமார் 10 நாட்களுக்கு முன்பு பெண்ணின் தந்தை தனது செல்போன் காணமால்போனது குறித்து ஆட்டோ ஓட்டுநரிடம் விசாரித்துள்ளார். அதன்கீழும் விசாரணை செய்தோம். கைதான அமீன் மீது 3 கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்'' என்றார்.