இந்தியா

"யோகா என்பது அனைவருக்குமானது" பிரதமர் மோடி

webteam

யோகா என்பது அனைவருக்குமானது, யோகாவின் பயன் அனைவரையும் சென்றடைவதை உறுதி செய்யுங்கள் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள பிரபாத் தாரா பள்ளி மைதானத்தில் நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். நிகழ்ச்சியில் உரையாற்றிய மோடி, மக்கள் அன்றாடம் யோகா செய்வதை பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். 

உலகம் முழுவதும் யோகா தினம் கொண்டாடப்பட்டு வருவதை சுட்டிக்காட்டிய மோடி, இதனை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என கூறினார். யோகா என்பது அனைவருக்குமானது என குறிப்பிட்ட மோடி நல்ல உடல் ஆரோக்கியத்துக்கு யோகா அவசியம் என தெரிவித்தார். நோய்களுக்கு மருந்துகள் மட்டுமே தீர்வல்ல, யோகாவும் ஒரு தீர்வு தான், குறிப்பாக இதயம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு யோகா சிறந்த தீர்வாக அமையும் என பேசிய மோடி, யோகாவின் பயன் அனைவரையும் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என கூறினார். 

யோகா தொடர்பான ஆய்வுகளை இன்னும் வேகமாக முன்னெடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். இதனை அடுத்து மைதானத்தில் கூடியிருந்த சுமார் 40 ஆயிரம் பேருடன் இணைந்து பல்வேறு ஆசனங்களை செய்தார்.